கடந்த பெப்ரவரி மாதம் 13ம் திகதி கொழும்பு – 15, மோதர வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு மற்றும் கொலை முயற்சி சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (16.03) மாலை பேலியகொட, விக்டோரியா பாலம் பகுதியில் வைத்து 11 கிராம் ஹெரோயினுடன் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இவர் 35 வயதுடைய பரகந்தெனிய, இம்புல்கொட பிரதேசத்தை சேர்ந்தவர் என மேலும் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் கொழும்பு வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சந்தேகநபர் ஒருவரும், மோதரை பொலிஸ் நிலையப் பொலிஸாரினால் மூன்று சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த சம்பவத்தின்போது பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் செல்ல பயன்படுத்திய முச்சக்கர வண்டி ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.