அடிமைப்பட்ட அரசியல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி – சஜித் 

அரசியல்வாதிகளின் ஏமாற்று கதைகளுக்கும், விசித்திரக் கதைகளுக்கும் அடிமைப்பட்டு, அரசியல் அதிகாரங்களின் கைக்கூலிகளாக மாறும் காலம் ஒழிக்கப்பட வேண்டும். அரசியல், மத, சமூக, கலாச்சார, பொருளாதார, கல்வி மற்றும் சுகாதார உரிமைகளுக்கான சரியான சூழலை உருவாக்குவதன் மூலம் குடிமக்களின் திறமைகளால் உயர் நிலைகளுக்கு செல்வதற்கான காலம் வந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 128 ஆவது கட்டமாக 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் மாத்தறை, அக்குரஸ்ஸ, லெனம் கனிஷ்ட வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வில்  உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவரின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில், கல்லூரியின் நடனம் மற்றும் அரங்கேற்றங்கள் குழுவினருக்குத் தேவையான ஆடைகளை பெறுவதற்குத் தேவையான ஒரு இலட்சம் ரூபா நிதியையும் நன்கொடையாக வழங்கி வைத்தார்.

தற்போது கிட்டத்தட்ட 40,000 பட்டதாரிகள் நமது நாட்டில் வேலையின்றி உள்ளனர். இலவசக் கல்வியில் கல்வியைப் பெற்று பல்கலைக்கழகங்களுக்குச் சென்ற 40,00 பேரை வேலையில்லாதோர் வரிசையில் நிற்க வைப்பது நியாயமானது அல்ல. இந்த 40,000 பேர் கல்வியில் உள்ள குறைபாடுகள் காரணமாகவே வேலையின்மை வரிசையில் நிற்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார். 

இலங்கையை முதல் இடத்திற்கு கொண்டு வரும் கொள்கையை முன்னெடுப்பதற்கு, ஆங்கில மொழி மற்றும் தகவல் தொழில்நுட்ப கல்வியறிவு, கணினி அறிவு என்ற பரப்பில் கூடிய ஈடுபாட்டை காட்ட வேண்டும். ஐக்கிய மக்கள் சக்தி இதற்கான விசேட வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

ஸ்மார்ட் நாட்டைக் கட்டியெழுப்புவதில், கல்வி கூட ஸ்மார்ட்டாக அமைய வேண்டும், எனவே ஐக்கிய மக்கள் சக்தி ஸ்மார்ட் கல்விக்காக முதலீடு செய்யும். இதன் மூலம் Smart Global Citizens உருவாகுவார்கள் என அவர் வலியுறுத்தினார். 

திறமையான பணியாளர்களை உருவாக்கினால்தான் முதலீட்டாளர்கள் நமது நாட்டிற்கு வருகைத்தருவார்கள், எனவே திறமையான பணியாளர்களை உருவாக்குவது நமது பொறுப்பு. இதற்காக ஏற்கனவே ஐக்கிய மக்கள் சக்தி செயற்பட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

Social Share

Leave a Reply