இலங்கையில் உள்ள மலையக சமூகத்தை பாதுகாப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உறுதியளித்தார்.
தலவாக்கலையில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தின் போது தமிழில் உரை ஆற்றிய எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்ததாவது,
“மலையக மக்களோடு தொழிலாளர் தினத்தை கொண்டாடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். நான் இலங்கையிலுள்ள மலையக சமூகத்தை பாதுகாப்பேன். உங்களது மொழி உரிமையை பாதுகாப்பேன். உங்களுக்கு காணி,வீட்டுரிமையை வழங்குவேன். மலையகத்தின் நகர,கிராமிய அபிவிருத்திக்கான பொறுப்பை நான் ஏற்கிறேன்.
உங்களது கல்வி, சுகாதார உரிமைகளை பாதுகாப்பேன். தோட்ட தொழிலாளர்களை சிறு தேயிலை உற்பத்தியாளர்களாக மாற்றுவேன். எனது தந்தை ரனசிங்க பிரேமதாசதான் உங்களுக்கு பிரஜாவுரிமையை வழங்கினார். நான் உங்களை இலங்கையராக கௌரவமாக வாழும் உரிமையை உங்களுக்கு வழங்குவேன்.
திகாம்பரம் உட்பட தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர்களுடன் இணைந்து மலையக மக்களுக்கு காணி உரிமையையும் சிறு தேயிலை தோட்டங்களின் உரிமையாளராகும் உரிமையையும் வழங்குவேன். யாருக்கு அடிமையாகாமல் 1500 ரூபா,1700 ரூபா தரும் வரை காத்துக்கொண்டு இருக்காமல் தேயிலை தோட்ட உரிமையாளராக வாழும் மூலதனத்தை பலத்தை உங்களுக்கு வழங்குவேன்” என தெரிவித்தார்.