800,000 கடந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை 

இவ் வருடம் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 800,000 கடந்துள்ளது. 

கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது, இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே சுற்றுலாப் பயணிகளின் வருகை 800,000 கடந்துள்ளது.இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்ட தரவுகளுக்கமைய, மே 5ம் திகதி இந்த இலக்கை கடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இவ் வருடம், மே மாதம் 9ம் திகதி வரையில் 819, 866 சுற்றுலாப் பயணிகளும் நாட்டிற்கு வருகை தந்துள்ளதுடன், மே மாதத்தின் முதல் 9 நாட்களில் 5,215 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். 

மே மாதத்தில் சுற்றுலா பயணிகளின் தினசரி வருகை சராசரியாக சுமார் 3,900 காணப்படுவதுடன், கடந்த மாதங்களுடன் ஒப்பிடும் போது இந்த எண்ணிக்கை 1,100னால் குறைவடைந்துள்ளது. 

தற்போது இலங்கையில் கோடைக் காலம் என்பதாலும், சுற்றுலா விசா தொடர்பான பிரச்சினைகள் இன்னும் முழுமையாக தீர்க்கப்படவில்லை என்பதாலும், சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  

Social Share

Leave a Reply