2024ம் ஆண்டிற்கான இந்தியன் பிரீமியர் லீக் தொரின் இறுதிப் போட்டிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தகுதி பெற்றுக்கொண்டது. கொல்கத்தா அணி, சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான முதலாவது Qualifier போட்டியில் 8 விக்கெட்டுகளினால் அபார வெற்றியீட்டியதன் ஊடாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுக்கொண்டது.
தரவரிசையில் முறையே முதல் இரண்டு இடங்களில் உள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் அகமதாபாதில் இன்று(21.05) செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முதலாவது Qualifier போட்டியில் பலப்பரீட்சை நடத்தியிருந்தன. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற ஹைதராபாத் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன்படி, ஹைதராபாத் அணி 19.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 159 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. ஹைதராபாத் அணி சார்பில் ராகுல் திருப்பதி 55 ஓட்டங்களையும், ஹென்ரிச் கிளாசென் 32 ஓட்டங்களையும், அணி தலைவர் பட் கம்மின்ஸ் 30 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். கொல்கத்தா அணி சார்பில் பந்து வீச்சில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுக்களையும், வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.
160 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணி 13.4 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை கடந்தது. கொல்கத்தா அணி சார்பில் அணித் தலைவர் ஸ்ரேயாஸ் ஐயர் 58 ஓட்டங்களையும், வெங்கடேஷ் ஐயர் 51 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இதன்படி, முதலாவது Qualifier போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கெட்டுகளினால் வெற்றியீட்டியதுடன், 2024ம் ஆண்டிற்கான இந்தியன் பிரீமியர் லீக் தொரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுக்கொண்டது. இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக கொல்கத்தா அணியின் மிட்செல் ஸ்டார்க் தெரிவு செய்யப்பட்டார்.
இன்றைய போட்டியில் தோல்வியடைந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, நாளை(22.05) நடைபெறவுள்ள ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகளுக்கிடையிலான Eliminator போட்டியில் வெற்றிப் பெறும் அணியுடன் இரண்டாவது Qualifier போட்டியில் மோதவுள்ளது.