ஜனாதிபதி தேர்தல் இந்த வருடம் நடத்தப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் சிறி ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று(20.06) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஒன்றை நடத்துவதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழு தயாராக இருப்பதாக சுட்டிக்காட்டிய ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம், கடந்த ஜனாதிபதித் தேர்தல் 2019ம் ஆண்டு நடைபெற்றதால் இந்த வருடம் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
தேர்தலை நடத்துவதற்கான சட்ட இயலுமை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடைத்துள்ளதாகவும், அதற்கமைய செப்டம்பர் மாதம் 16ம் திகதிக்கும் ஒக்டோபர் மாதம் 17ம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் தேர்தல் நடத்தப்படலாம் எனவும் சமன் சிறி ரத்நாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த காலப்பகுதிக்கு அமைவாக தேர்தலுக்கான திகதி நிர்ணயிக்கப்பட்டு அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.