அடுத்த ஆறு போகங்களில் நெல் விளைச்சலை இரட்டிப்பாக்கும் இலக்கை எட்ட முடியும்

தற்பொழுது கிடைத்து வரும் நெல் அறுவடையின் அளவை எதிர்வரும் ஆறு போகங்களில் இரட்டிப்பாக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்கியுள்ள இலக்கை அடைவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர் ஜானக தர்மகீர்த்தி தெரிவித்தார்.

”இரண்டு வருட முன்னேற்றமும் எதிர்காலமும்” என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (02.07) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர் ஜானக தர்மகீர்த்தி இதனைத் தெரிவித்தார்.

இதற்காக தொழில்நுட்பப் பொதி (பெக்கேஜ்) ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், பாரம்பரிய விவசாயத் தொழிலுக்கு அப்பால் அதிகரித்து வரும் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யும் பொறுப்பை விவசாய அமைச்சு வெற்றிகரமாக நிர்வகித்து வருவதாகவும் அவர் கூறினார்.

விவசாயத் துறைக்கு புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியதன் பலன்கள் ஏற்கனவே கிடைத்து வருவதாகவும் அவர் கூறினார்.

மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சின் செயலாளர்

”பாரம்பரிய விவசாயத்திற்கு அப்பால் சென்று வளர்ந்து வரும் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வது விவசாய அமைச்சின் பொறுப்பாகும். தற்போது இதனை வெற்றிகரமாக நிர்வகித்து வருகிறோம். குறிப்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் எதிர்வரும் ஆறு போகங்களில் நெற்பயிர் அறுவடையின் அளவை இரட்டிப்பாக்க வேண்டும் என்ற இலக்கை அடையத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்.

அதற்காக விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் தொழில்நுட்ப பெக்கேஜ் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளோம். மேலும் கைவிடப்பட்ட வயல் நிலங்கள் உட்பட அனைத்து நெல் வயல்களும் நெற் பயிற்செய்கைக்குப் பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது.

பயிரிடப்பட்ட நிலத்தை ஏனைய பயிர்களுக்கு பயன்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். தற்போது நெற்செய்கையின் வெற்றிகரமான பெறுபேறுகள் எட்டப்பட்டுள்ளதுடன் 800,000 மெற்றிக் தொன் அரிசி அறுவடை கிடைத்துள்ளது.

நெல் விலை தொடர்பில் அமைச்சு என்ற வகையில் தலையிட முடியாது. ஆனால் திறந்த பொருளாதாரத்தில் விலை பராமரிப்பு நியாயமாக இருக்கும் என்று அரசாங்கம் நம்புகிறது. பொருட்களின் விலை உயர்வு ஓரிரு முறை நடந்தாலும், அரசு தலையிட முடியாது. தொடர்ந்து நடந்தால், தலையிட முடியும். தற்போது இரண்டு வகையான அரிசிகளின் கையிருப்பே பேணுப்பட்டுள்ள நிலையில், எதிர்காலத்தில் அனைத்து வகை அரிசிகளும் பாதுகாப்பாக களஞ்சியப்படுத்தப்பட்டு சந்தைக்கு விநியோகிக்கப்படும்.

மேலும், உலர் வலயத்தில் அதிக கவனம் செலுத்தி, விவசாயத் திணைக்களத்தின் பரிந்துரையின் பேரில், பயன்படுத்தப்படாத வயல் நிலங்கள் ஏனைய பயிர்களுக்கு ஒதுக்கப்படுகின்றன. இது உணவு உற்பத்தியில் சாதகமான முன்னேற்றமாக இருக்கும்.

பாரம்பரிய பயிர்ச்செய்கை முறைக்கு அப்பால் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யும் நடவடிக்கையாக விவசாய நவீனமயமாக்கல் வேலைத் திட்டத்திற்கு 2500 மில்லியன் ரூபா வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன்படி 26 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் பல்வேறு விவசாய நடவடிக்கைகளுக்கு வட்டியில்லா கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில், இளைஞர் விவசாய தொழில்முனைவோர் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது.

இதனால் விவசாயம், பெருந்தோட்டக் கைத்தொழில், கால்நடை மற்றும் மீன்பிடித் தொழில் ஆகிய துறைகளில் இளைஞர்களின் தொழில் முனைவோர் வாய்ப்புகள் அதிகரித்துள்ளதோடு, புதிய தொழில்நுட்பத்தின் பயன்பாட்டினால் இளைஞர் சமூகத்தை இந்தத் துறைக்கு ஈர்க்கும் முயற்சிகள் வெற்றியடைந்துள்ளன.

தற்போது விவசாயத் துறையை உள்ளுர் எல்லைக்கு அப்பால் வெளிநாட்டுச் சந்தையை இலக்காகக் கொண்டு விசேட திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. ஸ்ட்ரோபரி, மாம்பழம், அன்னாசி போன்ற பழப் பயிர்களை ஏற்றுமதி செய்யும் போக்கு அதிகரித்துள்ளது.

இது தவிர, விளைச்சல் ஏற்ற இறக்கங்கள் மற்றும் பயிர் இழப்புகளை மையமாக வைத்து தம்புள்ளையில் குளிரூட்டி நிலையமும் நிறுவப்படவுள்ளது. தகுந்த பயிர்கள் பற்றி விவசாயிகளை அறிவூட்டி வருகிறோம்.

எமது அமைச்சின் கீழ் இயங்கும் பொருளாதார நிலையங்களின் முகாமைத்துவத்தினால் பயிர் சேதத்தை சுமார் 50% வரை குறைக்க முடிந்துள்ளது. விவசாயிகளின் ஆதரவுடன், பயிர்களை முறையாக சந்தைக்கு விடுவதற்கான முறையைத் தயாரிக்கும் பணியை மேற்கொண்டு வருகிறோம்.

அறுவடைக்குப் பிந்தைய பாதிப்புகளை குறிப்பாக போக்குவரத்தின் போது குறைக்க ரயில்வே சேவையைப் பயன்படுத்துவது குறித்து ஏற்கனவே போக்குவரத்து அமைச்சுடன் ஆராய்ந்து வருகிறோம்.

தற்போதும் பெலியத்தையிலிருந்து பயணிக்கும் ரயில் சேவைகளை ஏனைய மாகாணங்களிலும் சேவையில் ஈடுபடுத்த கவனம் செலுத்தப்பட்டுள்ளது.” என்று தெரிவித்தார்.

Social Share

Leave a Reply