LPL: தீர்மானமிக்க போட்டியில் கொழும்பு அணிக்கு இலகுவான இலக்கு 

லங்கா பிரீமியர் லீக் தொடரில் அடுத்த சுற்றுக்குள் நுழைவதற்கு கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்கு 139 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

கோல் மார்வல்ஸ், கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணிகளுக்கு இடையிலான தீர்மானமிக்க போட்டி தற்பொழுது நடைபெற்று வருகின்றது. கொழும்பில் நடைபெறும் இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கொழும்பு அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. 

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய காலி அணி 19.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 138 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. காலி அணி சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய நிரோஷன் டிக்வெல்ல, அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் குறைந்தளவு ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க, அணி ஆரம்பத்திலேயே தடுமாற்றத்தை எதிர்நோக்கியது. 

சதீஷ ராஜபக்ஷவும் 15(17) ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க, ஜோடி சேர்ந்த  ரிம் ஷெய்பேர்ட், பானுக்க ராஜபக்ஷ இருவரும் இணைப்பட்டமாக 41 ஓட்டங்களை பெற்று அணிக்கு வலு சேர்த்தனர். பானுக்க ராஜபக்ஷ 35(15) ஓட்டங்களுக்கும்,  ரிம் ஷெய்பேர்ட் 44(38) ஓட்டங்களுக்கும் ஆட்டமிழந்தனர். 

பின்னர் களத்திற்கு வந்த காலி வீரர்கள், கொழும்பு அணியின் பந்து வீச்சாளர்களை எதிர்க்கொள்ள இயலாமல் குறைந்தளவு ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க காலி அணி 19.5 ஓவர்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து 138 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. 

கொழும்பு அணி சார்பில் பந்தவீச்சில்  மதீஷ பத்திரன 4 விக்கெட்டுக்களையும்,  டுனித் வெல்லாலஹே, ஷதாப் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர். 

இதன்படி, கொழும்பு அணிக்கு 139 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 6 போட்டிகளில் 3 வெற்றிகளைப் பெற்று 6 புள்ளிகளுடன் தரவரிசையில் 3ம் இடத்திலுள்ள கொழும்பு அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும்.  

Social Share

Leave a Reply