“மலையகத் தமிழன் என்பது எனது அடையாளம் ” – ஜீவன்

“மலையகத் தமிழன்” என்பது எனது அடையாளம்! ஆனால், “நான் ஒரு இலங்கையன்”. அதை என்னால் எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்க முடியாது என நீர் வழங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களால் அரசாங்கத்தின் திட்டம் தொடர்பில் மக்களுக்கு தெளிவுப்படுத்தும் முகமாக, “ஒன்றாக வெல்வோம்” என்ற தொனிப் பொருளிலான பொதுக்கூட்டத் தொடரின், இரண்டாவதுப் பேரணி கண்டி பொது வர்த்தக நிலையத்திற்கு முன்பாக நேற்று முன்தினம் (14.07) இடம்பெற்றிருந்தது.

இந்நிகழ்வில், பல்வேறு அரசியல் கட்சியினரை பிரதிநிதித்துவப்படுத்திய அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் என பலர் கலந்துக் கொண்டிருந்தனர்.

இதன் போது கருத்து தெரிவித்த அமைச்சர் ஜீவன் தொண்டமான்,
“2024 ஆம் ஆண்டில் அடுத்த ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுபவர் அதிமேதகு ரணில் விக்ரமசிங்க அவர்கள் தான். அந்த அடையாளத்துக்கு ஒரு தீர்வு கட்டாயம் கிடைத்தாக வேண்டுமென்றால், அடுத்த ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க வந்தாக வேண்டும்.

” கெஞ்சி கேட்டால் பிச்சை துணிந்து கேட்டால் உரிமை”. நாம் இந்த 1700 ரூபாய் சம்பளத்தை மட்டும் இறுதிக் கோரிக்கையாக வைக்க கூடாது ஏனென்றால், நம்மை பொறுத்த வரைக்கும் “அடையாளப் பிரச்சினை” ஒன்று இருக்கின்றது. அந்த அடையாளத்திற்கு கட்டாயம் ஒரு தீர்வு கிடைத்தாக வேண்டும். அந்த அடையாளத்தி்ற்கு கட்டாயம் ஒரு தீர்வு கிடைத்தாக வேண்டுமென்றால், கட்டாயம் அடுத்த ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க அவர்கள் வந்தாக வேண்டும்.

அப்படி இருக்கும் போது, நான் என்னுடைய மக்களிடம் ஒரே ஒரு விடயத்தை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன். நான் ஒரு “மலையகத் தமிழன்” என்று எவ்விடத்திலும் சொல்ல போவது கிடையாது.

“மலையகத் தமிழன்” கலாச்சாரமாக என்னுடைய அடையாளம். ஆனால், நான் ஒரு “இலங்கையன்” அதை நான் எந்த ஒரு இடத்திலும் விட்டுக் கொடுக்க முடியாது. அப்படி இருக்கும் தருணத்தில் உங்கள் எல்லோரிடமும் நான் ஒரே ஒரு விடயத்தை தான் சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன். இன்றைக்கு நிறைய பேர் இந்த பதவியை பார்த்து பயந்து ஓடிப்போய் இருதியில் ஒன்றுமே செய்ய முடியாமல், “நான் தான் நாட்டுக்கு அடுத்த ஜனாதிபதி” என்று சொல்ல வருகிறார்கள். ஆனால், மக்கள் எல்லோருக்கும் தெரியும். யார் நின்று வெற்றிப் பெற்றது என்று.

இப்படி இருக்கும்போது, மக்கள் எல்லோருமே ஒன்று திரண்டு, அனைவருமே ஒன்றிணைந்து, ஒழுக்கமாக, கட்டுக்கோப்பாக இருந்து அடுத்த ஜனாதிபதியாக யாரை தெரிவுசெய்யப் போகின்றோம்? நிச்சயம் அது ரணில் விக்ரமசிங்க அவர்களாகவே இருக்க வேண்டும்.

அதே நேரம்,
இன்றைக்கு கண்டி மாவட்டத்தை பொறுத்தவரைக்கும், இங்கிருந்து, மலையகத்தில் இருந்து கிட்டத்தட்ட 2000 ற்கு மேற்பட்டோர் வருகைத் தந்திருக்கின்றீர்கள். உங்கள் எல்லோரிடமும் நான் ஒரே ஒரு விடயத்தை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

இன்றைக்கு JDB, SPC காணியாக இருக்கட்டும் , JDB, SPC தொழிலாளர்களாக இருக்கட்டும். இன்றைக்கு உங்கள் எல்லோருக்கும் ஒரு நற்செய்தியை சொல்ல நான் விரும்புறேன். உங்களின் ETF, EPF பிரச்சினைகளை தீர்ப்பதற்காக கௌரவ ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ், JDB, SPC தோட்டங்களுக்கு கிட்டத்தட்ட 5000 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்து இருக்கிறார். அப்படி இருக்கும்போது இன்றைக்கு அவர் மக்களுக்கு முன்னுரிமை கொடுக்கின்றார்.

அது மட்டுமில்லாமல், நாம் ரூபாய் 1000 வீதியில் இறங்கினோம். நாம் “நம்முடைய இனத்தின் முக்கியத்துவத்தை” இறக்கினோம் அதுதான் உண்மை.

நாம் ஏன் கேவலம், ஒரு 1000, 1700, 2500 ரூபாய்க்காக வீதியில் இறங்கினோம். காணி உரிமைக்காக வீதியில் இறங்குவோம். 200 வருடமாக இந்த வீதியில் நாம் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றோம். அப்படி இருக்கும்போது நமக்கு தேவையான விடயம் “காணி உரிமை” ஆகும்.

“காணி உரிமை” கட்டாயம் நமக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையி்ல் தான் நான் கெளரவ ஜனாதிபதி அவர்களிடம் ஒரு கோரிக்கையை முன் வைத்தேன். மக்களிடம் காணி உரிமையை கொடுங்கள், கட்டாயம் அவர்கள் மேலே வருவார்கள். எமக்கு இலவச வீடு தேவையில்லை. வீடு கட்டுவதற்கான வாய்ப்பை உருவாக்கித் தாருங்கள். அது போதும் என்று நான் அவரிடம் கூறினேன்.

இன்றைக்கு நம்மை பொறுத்த வரைக்கும் ஜனாதிபதி அவர்கள், கிட்டத்தட்ட 4,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்து இருக்கின்றார். அந்த நிதி ஒதுக்கீடு செய்வதற்கான காரணம் என்னவென்றால், மக்களுக்கு காணி உரிமையை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதே ஆகும்.

இதில் சில மலையகத் தலைவர்கள் பெருந் தலைவர்கள்!…. அவர்கள் கூறுகின்றார்கள், “இல்லை நம் மக்களிடம் காணி உரிமையை கொடுத்தால் காணியை அவர்கள் விற்று சென்று விடுவார்கள்” என்று. விற்கிறார்கள் அல்லது விற்க்காமல் போகின்றார்கள் அது அவர்களின் இஷ்டம். நாம் ஏன் மக்களிடம் கையேந்தி நிற்க வேண்டும்?

மறைந்த தலைவர் அமரர் ஆறுமுகம் தொண்டமான் ஐயா என்றைக்குமே கூறும் ஒரு விடயம்,
“கெஞ்சி கேட்டால் பிச்சை துணிந்து கேட்டால் உரிமை”. அந்த உரிமையை நாம் பாதுகாப்போம்.

அதே நேரத்தில், கெளரவ ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் மலையகத்தின் அபிவிருத்தியின் பொருட்டு கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு கிட்டத்தட்ட 2000 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து இருக்கின்றார். அந்த 2000 மில்லியனில் ரூபாவில் 150 மில்லியன் ரூபாய் கண்டி மாவட்டத்திற்கு மட்டுமே ஆகும். வரலாற்றிலேயே கண்டி மாவட்டத்திற்கான அதிகமான அளவு நிதி ஒதுக்கீட்டை நாமே வழங்கி இருக்கிறோம். அதற்கு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ராமேஸ்வரன் அவர்கள் தான் பொறுப்பாக இருக்கின்றார்.

என்னை பொறுத்த வரைக்கும் நாங்கள் மக்களிடம் உண்மையாக இருந்து இருக்கிறோம். எந்த இடத்திலும் நாங்கள் பயந்து கொண்டு ஓடி போகவில்லை. பிரச்சனை என்று ஒன்று வரும் போது நாங்கள் பயந்து கொண்டு காட்டில் உள்ள மிருகங்களை படம் எடுக்க யால சரணாலயத்திற்கு ஓடிப் போகவில்லை.

எங்களை பொறுத்த வரைக்கும், மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் “நின்னு சந்திப்போம். அதுமட்டுமல்லாமல், நின்னு சாதிப்போம்”, மக்கள் இன்றைக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பக்கம் இருக்கின்றார்கள் என்ற ஒரு நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.

அதே நேரத்தில், இன்றைக்கு கண்டி மாவட்டத்தில், நாவலப்பிட்டி
பகுதியில் திரு. மஹிந்தானந்தா அவர்கள் இருக்கின்றார் அவருக்கு நாம் கட்டாயம் ஆதரவு கொடுத்தாக வேண்டும்.

அதே மாதிரி பன்விலயில் திரு. ரோஹான் ரத்வத்த இருக்கின்றார் அவருக்கும் நாம் ஆதரவு கொடுப்போம். மேலும், திரு. திலும் அமுனுகம இருக்கிறார் அவருக்கும் நாம் ஆதரவு கொடுப்போம்.

கம்பளையில் திரு. அனுராத ஜெயரத்தின இருக்கிறார் அவருக்கும் நாம் ஆதரவு கொடுப்போம். ஆனால், அவர்கள் அனைவருக்கும் இன்றைக்கு , ஜீவன் தொண்டமானின் ஆதரவு தேவை” என்றார்.

Social Share

Leave a Reply