இந்திய வீட்டு திட்டம் இடைநிறுத்ததிற்கான காரணத்தை கூறிய சந்தோஷ் ஜா

பாரத்-லங்கா மலைநாட்டு தோட்ட வீடமைப்பு திட்டம் எனும் பெயரில் ஆரம்பித்து வைக்கப்பட்ட, நான்காம் கட்ட இந்திய வீடமைப்பு திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளமைக்கு காணிகளை விடுவிக்கப்படாமையே காரணம் என இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா,
தமிழ் முற்போக்கு கூட்டணி தூதுக்குழுவிடம் தெரிவித்துள்ளார்.

1,300 வீடுகளின் நிர்மாணப் பணிகள் சுமார் 375 மில்லியன் ரூபா செலவில் அடுத்த மாதத்தில் முடிவடையும் என உறுதியளிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்திய தரப்பில் எவ்வித தாமதமும் இல்லை என இந்திய தூதர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தலைமையிலான வேலு குமார், உதய குமார் ஆகியோர் அடங்கிய தூதுக்குழுவுக்கும், இந்திய தூதர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையில், தற்போதைய அரசியல் நிலைமை, இலங்கை பொருளாதார அபிவிருத்திக்கான இந்திய உதவிகள், மலையகத்துக்கான பிரத்தியேக கல்வி, தொழில் நுட்ப துறைகளுக்கான உதவிகள் குறித்து கலந்துரையாடல் இடம்றெ்றது.

தமிழ் முற்போக்கு கூட்டணி பங்கு பெறுகின்ற எமது அரசாங்கம் விரைவில் உருவாகும். கடந்த 2015-2019 ஆம் ஆண்டு நல்லாட்சியில் நடை பெற்றதை போன்று, தாமதங்களை களைந்து ஒட்டு மொத்த 10,000 வீடமைப்பு பணிகளையும் நாம் செய்து முடிப்போம் இந்திய தூதர் சந்தோஷ் ஜாவிடம் உறுதியளித்ததாக மனோ கணேசன் தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

மலையக பெருந்தோட்ட மக்களின் காணி உரிமை தொடர்பில் இன்று நிலவும் உதாசீன போக்கை நாம் முடிவுக்கு கொண்டு வருவோம். 200 ஆண்டுகளுக்கு முன் பிரிட்டிஷ் காலனி அரசு கட்டிய லயன் காம்பறாக்களை கிராமங்கள் என்ற சொல்ல முயலும் முயற்சியை, எமது காணி உரிமையை குழி தோண்டி புதைக்கும் செயல்பாடாக நாம் பார்ப்பதற்கு காணி உரிமை தொடர்பில் இன்றைய அரசின் உதாசீன போக்கே காரணம் எனவும் நாம் இந்திய தூதரிடம் எடுத்து கூறினோம்.

மேலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து, லயன் காம்பறாக்களை கிராமங்கள் என்ற யோசனைக்கு, நாம் வழங்கிய ஆறு அம்ச மாற்று யோசனை ஆவணத்தையும் நாம் இந்திய தரப்புக்கு வழங்கினோம்.

நான்காம் கட்ட இந்திய வீடமைப்பு திட்டத்துக்கு மேலதிகமாக, இந்திய அரசு பின்வரும் உதவிகளை மலையக மக்களின் நலன் கருதி வழங்க உள்ளதாக எமக்கு இந்திய தூதர் சந்தோஷ் ஜா எடுத்து கூறினார்.

விஞ்ஞானம், ஆங்கிலம், தொழில் நுட்ப கல்வி, கணிதம் ஆகிய துறை சார் ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கான
அப்பியாச கொப்பிகள், பாடசாலை பைகள் வழங்கல் தோட்ட தொழிலாளர் வீடுகளுக்கு சூரிய சக்தி மூலமான விளக்குகள்
ஸ்மார்ட் வகுப்பறைகள் பாடசாலை பௌதிக கட்டுமானங்கள் தொண்டமான தொழில் நுட்ப நிலையத்தை தரம் உயர்த்தும் உதவிகள்
இவை அனைத்தும் நமது மக்கள் நலன் கருதி இந்திய அரசால் வழங்கப்படும் உதவிகள்.

ஆகவே, இவற்றுக்கு தமிழ் முற்போக்கு கூட்டணியின் நன்றிகளை தெரிவித்து கொண்டு, அதேவேளை இவற்றை அரசியல் நோக்கங்களுக்கு அப்பால் பாரபட்சம் இன்றி அனைத்து மாவட்ட மக்களுக்கும் வழங்க படுவதை உறுதி செய்யும்படி இந்திய அரசை நாம் கோரினோம்” என்றார்.

Social Share

Leave a Reply