இலங்கைக்கு ஆறுதல் வெற்றி 

இலங்கைக்கு ஆறுதல் வெற்றி 

அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் அணிக்கும், அயர்லாந்து மகளிர் அணிக்கும் இடையிலான சர்வதேச ஒரு நாள் போட்டித் தொடரின் மூன்றாவது இறுதியுமான போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. தொடரின் முதல் 2 போட்டிகளிலும் வெற்றியீட்டிய அயர்லாந்து அணி, தொடரை கைப்பற்றியிருந்த நிலையில் இலங்கை அணியினால் ஆறுதல் வெற்றியை பெற்றுக்கொள்ள முடிந்தது. 

தொடரின் இறுதிப் போட்டி அயர்லாந்து, பெல்பாஸ்டில் இன்று(20.08) நடைபெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. 

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து மகளிர் அணி 46.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 122 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது. அயர்லாந்து அணி சார்பில் அர்லீன் கெல்லி 35(75) ஓட்டங்களை பெற்றுக் கொள்ள, ஏனைய வீரர்கள் குறைந்தளவு ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர். 

இலங்கை அணி சார்பில் பந்து வீச்சில் அச்சினி குலசூர்யா, சமரி அத்தபத்து ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களையும், சச்சினி நிசன்சலா 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினார்.   

123 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 23.1 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை கடந்தது. இலங்கை அணி சார்பில் ஹர்ஷிதா சமரவிக்ரம ஆட்டமிழக்காமல் 48(56) ஓட்டங்களையும், சமரி அத்தபத்து 48(49) ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். 

இதன்படி, இலங்கை மகளிர் அணி 8 விக்கெட்டுக்களினால் இந்த போட்டியில் வெற்றியீட்டிய போதும், 3 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் 2 போட்டிகளிலும் வெற்றியீட்டிய அயர்லாந்து தொடரை கைப்பற்றியது. போட்டியின் ஆட்ட நாயகியாக இலங்கை அணித் தலைவி சமரி அத்தபத்துவும், தொடரின் ஆட்ட நாயகியாக அயர்லாந்து அணியின் அர்லீன் கெல்லியும் தெரிவு செய்யப்பட்டனர். 

Social Share

Leave a Reply