
ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தலை உடனடியாக நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒத்திவைப்பு தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி கட்சிகள் மற்றும் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கை அமைப்பு உள்ளிட்ட பல தரப்பினர் தாக்கல் செய்த மனுக்கள் இன்று(22.08) பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
இதன்போது ஜனாதிபதி, நிதியமைச்சர் மற்றும் தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களினால், வாக்காளர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளூராட்சி மன்றத் தேர்தலைக் கடந்த வருடம் மார்ச் மாதம் 09ம் திகதி நடத்தத் திட்டமிட்ட நிலையில் பின்னர் ஏப்ரல் மாதம் 25ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
பொருளாதார நெருக்கடியிலிருந்து நாடு மீண்டு வருவதால் அரசாங்கம் நிதிப் பற்றாக்குறையைக் காரணம் காட்டி தேர்தலை மீண்டும் ஒத்திவைத்தது.