
மன்னார், மடு பிரதேச செயலகம் ஒழுங்கு செய்த வருடாந்த கலை பண்பாட்டுப் பெருவிழா நேற்று(22.08) மடு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
மடு பிரதேச செயலாளர் கீ பீட்நிஜாகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மன்னார் மாவட்டச் செயலாளர் க.கனகேஸ்வரன் பிரதம விருந்தினராகவும், வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் லாகினி நிருபராஷ் சிறப்பு விருந்தினராகவும், மடு வலயக் கல்விப் பணிப்பாளர் வொலன்ரைன் கௌரவ விருந்தினராகவும் கலந்து சிறப்பித்தனர்.
விருந்தினர்கள் காலை 9.15 மணியளவில் குடை கொடி ஆலவட்டம், கோலாட்டம், கும்மி, நடனம், பூரண கும்பம் தாங்கிய மகளிர் மற்றும் தமிழ் வளர்த்த சான்றோர்களின் வேடப்புனைவாளர்கள்சகிதம் சம்பிரதாய பூர்வமாக வரவேற்கப்பட்டனர்.
தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் மடு பிரதேச செயலாளர் தலைமையில் அமரர் செல்லன் மாதவன் அரங்கில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
வரவேற்புரையை உதவி பிரதேச செயலாளர் ஜம்யுதாபூவிலிங்கம் நிகழ்த்தினார்.
இந்த நிகழ்வில், மூன்று கலைஞர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட மன்னார் மாவட்டச் செயலாளர் க.கனகேஸ்வரன் தமது உரையில் கலை நிகழ்வுகளின் சிறப்பு பற்றியும் அழைப்பிதழில் குறிப்பிட்டவாறு நேர முகாமைத்துவம் கடைப்பிடிக்கப்பட்டமை தொடர்பிலும் பாராட்டி உரையாற்றினார்.
கலைஞர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் கலை மன்ற உறுப்பினர்கள், மாணவர்கள் எனப் பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் இவ்வாறான சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட விழா மடு பிரதேசத்தில் காணமுடிந்ததாகப் பலரும் கருத்து வெளியிட்டனர்.