
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் அனுரகுமார திசாநாயக்கவுக்கும் ஒன்றிணைந்து மோசமான கூட்டமைப்பொன்றை உருவாக்கி தன்னை தோல்வி
அடைய முயற்சிக்கின்றார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் கூட்டணியின் 36 ஆவது மக்கள் வெற்றிப் பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் எஹலியகொட நகரில்
நேற்று (06.09) வெற்றிகரமாக இடம்பெற்றது.
இந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே சஜித் பிரேமதாச இதனைத் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருக்கு 200 மில்லியன் ரூபா செலவாகிறது. இவர்கள் இருவரும் கலந்தாலோசித்து ஜனாதிபதி பதவியையும்,
பிரதமர் பதவியையும் பிரித்துக்கொண்டால் 200 மில்லியன் செலவு குறைவடையும்.
இதுவரை காலமும் இவர்கள் நாடகமாடி மக்களை ஏமாற்றி இருக்கிறார்கள். இது இவர்களுடைய டீல்.
இந்த டீலோடு தபால் மூல வாக்களிப்புக்கு முந்தைய தினம் அரச ஊடகத்தில் உரையாற்றுவதற்கு அநுர குமாரவுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியின் வரலாற்றுக் காலம் முழுதும் வழி தவறுகின்ற மற்றும் காட்டிக் கொடுக்கின்ற வேலையை செய்திருக்கின்றார்.
2019 ஆம் ஆண்டு தேர்தலின் போதும் தன்னை தோல்வி அடையச் செய்வதற்காக கோட்டாபய உடன் டீல் செய்து கொண்டார்.
பணத்திற்கான டீல் இல்லை. எமது டீல் மக்களுடனே.
இன்று காணப்படுகின்ற சேறு பூசுகின்ற அழுக்கு அரசியலில் மக்களை ஏமாற்றி முட்டாளாக்குகின்ற கீழ்தரமான அரசியல் முறையை நாம்
இல்லாதொழிக்க வேண்டும்.இன்று வருகின்றார்கள் செல்கின்றார்கள் என்ற வதந்திகள் பரப்பப்பட்டாலும் ஐக்கிய மக்கள் சக்தியின் பயணத்தில்
எந்த ஒரு மக்கள் பிரதிநிதியையும் பணம் கொடுத்து பெற்றுக்கொள்ளவோ அல்லது தக்க வைத்துக் கொள்ளவோ இல்லை.
நாட்டுக்கு ஒரே தீர்வு ஐக்கிய மக்கள் சக்தி
இந்த நாட்டுக்கு உள்ள ஒரே மாற்று வழி ரணில் அநுர தொடர்பு அல்ல. மக்களின் வேதனையை மக்களின் உயிர் நாடியை உணருகின்ற மக்கள் மயமான,
ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய மக்கள் கூட்டணியுமாகும். என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
தான் தெற்கிலே வெற்றி அடைந்திருப்பதாக அனுரகுமார திசாநாயக்க வடக்கிற்கு சென்று கூறுகின்றார்.
அது வெறும் கனவு. அநுரவும் ரணிலும் அரசியல் ரீதியான சம்பந்த உறவு வைக்கின்ற போது ஐக்கிய மக்கள் சக்தி பொதுமக்களுடன்
ஒப்பந்தம் செய்கின்றது. தம்மிடம் திருடர்களுடனான டீல் இல்லை. தமது ஒரே பொறுப்பு துன்பத்தில் இருக்கின்ற மக்களை மீட்டெடுப்பது” என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.