
அரசியலமைப்பையும், சட்டத்தின் ஆட்சியையும், ஜனநாயக கட்டமைப்பையும் பாதுகாத்து, நல்லாட்சியை முன்னெடுக்கின்ற வகையில் பொறுப்புள்ள நிர்வாகக் கட்டமைப்பை முன்னெடுப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கொழும்பு கோட்டே ராஜ மகா விகாரைக்கு இன்று (08.09) சென்று வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தசராஜ தர்மத்தை மையப்படுத்தி முன்னெடுத்துச் செல்வோம் என்றும் உறுதியளித்தார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“ஒற்றுமையே நாட்டின் மிகப் பெரிய பலமாகும். எனவே இன, மத, குல, வகுப்பு, கட்சி பேதங்களின்றி ஒற்றுமையோடு முன்னோக்கிச் செல்வதற்கு நடவடிக்கை எடுப்போம்.நாட்டின் அனைத்து கொடுக்கல் வாங்கல்களும் முறையாகவும் நியாயமாகவும் இடம்பெறும். சரியான வழிமுறையை கையாளும் போது எவருக்கும் திருட முடியாது.
கொள்முதல் முறை இல்லாத காரணத்தினால் தான் அதிகமான மோசடிகள் இடம் பெறுகின்றன. அதனால் சரியான நடைமுறைகளை கையாண்டு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்.
அவசர நிலைமைகளின் போதும் இடம்பெறுகின்ற கொள்முதல் முறைகளிலிருந்து விலகி பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டமையால், கடந்த காலங்களில் பெருந்தொகையான நிதி மோசடி இடம் பெற்றிருக்கின்றது. VFS போன்ற கொடுக்கல் வாங்கல்களில் மோசடி இடம் பெற்றுள்ளது. இது குறித்து நீதிமன்ற தீர்ப்பொன்றும் கிடைக்கப்பெற்றுள்ளது. எனவே அரச நிர்வாகத்துக்குள் முறையான கட்டமைப்பு ஒன்று காணப்பட வேண்டும்” என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார்.