
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளில் 77% இதுவரை விநியோகிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சுமார் 13.2 மில்லியன் உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளை விநியோகிக்கும் பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று மற்றும் நாளை சனிக்கிழமை வாக்காளர்களுக்கு வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
எந்தவொரு வாக்காளரும் சனிக்கிழமைக்குள் தமது உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளைப் பெறவில்லையென்றால், எதிர்வரும் 18 ஆம் திகதிக்கு பின்னர் தமது தேசிய அடையாள அட்டையுடன் உள்ளூர் தபால் நிலையத்திற்குச் சென்று தமது அடையாளத்தை சரிபார்த்து வாக்குச் சீட்டைப் பெற்றுக்கொள்ள முடியும் என பிரதி தபால் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 21 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் வரை வாக்காளர்களுக்கு இந்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.