அனுர‌ ஆட்சிக்கு வந்தால் மீண்டும் வரிசை யுகம் – ஜனாதிபதி

அனுர‌ ஆட்சிக்கு வந்தால் மீண்டும் வரிசை யுகம் - ஜனாதிபதி

அடுத்த 10 வருடங்களில் ஒவ்வொரு பிள்ளையும் ஆங்கில மொழிப் புலமையைப் பெறுவதற்குத் தேவையான வாய்ப்புகளை ஏற்படுத்த ” English for all” என்ற வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

மல்வானை மக்களுடனான நேற்றைய (17.09)சந்திப்பின் பின்னர் ஆங்கில மொழி அறிவு இன்மையால் இளைஞர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு அரசாங்கத்தின் தீர்வு என்ன? என இளைஞர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே ஜனாதிபதி இதனைக் கூறினார்.

கல்வி அமைச்சராக தான், வெள்ளை அறிக்கை மூலம் இந்த பிரேரணையை கொண்டு வந்த போது அதற்கு எதிராக ஜே.வி.பி வீதியில் இறங்கியதை நினைவு கூர்ந்த ஜனாதிபதி, அந்த வேலைத்திட்டம் அன்று நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் இன்று நாட்டில் ஆங்கில மொழி தொடர்பான பிரச்சினை ஏற்பட்டிருக்காது எனவும் சுட்டிக்காட்டினார்.

Gen Z தலைமுறையினருக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதே தமது நோக்கம் என தெரிவித்த ஜனாதிபதி, வேலைத்திட்டங்களற்ற பொய்யான வாக்குறுதிகளுக்கு மட்டுப் படுத்தப்பட்ட சஜித் மற்றும் அநுரவின் அரசியல் நலன்களுக்கு இளைஞர்கள் பலியாக வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

நான் பிரதிநிதித்துவப்படுத்திய பியகம தொகுதிக்கு வருகை தரும் சந்தர்ப்பங்களில் மல்வானை மக்களை சந்திப்பதை நான் வழமையாகக் கொண்டிருந்தேன். மல்வானை மக்கள் எப்போதும் எனக்கு பாரியளவு ஆதரவை வழங்கியுள்ளனர்.

அன்று மல்வானை மிகச் சிறியதொரு நகரம். வர்த்தக வலயம் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மல்வானை ஒரு பாரிய நகரமாக மாறியது. இன்று பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மல்வானை வர்த்தகம் மற்றும் வர்த்தக வலயத்துடன் இணைந்து இந்தப் பகுதியில் அபிவிருத்தியடைந்த பொருளாதாரம் கட்டியெழுப்பப்பட்டுள்ளது.

நான் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி எமக்குத் தேவையான நிதியைப் பெற்றுக்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருந்தது.

பணத்தை அச்சிடவோ அல்லது கடன் பெறவோ முடியாத நிலை ஏற்பட்டது. அதனால் பல கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது. ஆனால் சுமார் ஆறு மாதங்களுக்குப் பிறகு, ரூபா வலுவடைந்து, பொருட்களின் விலைகள் குறைந்து, நாடு நிலைபெறத் தொடங்கியது.

இவை அனைத்தையும் மேற்கொள்ளும் அதே நேரம், குறைந்த வருமானம் பெறுவோருக்கு சமுர்த்தியை விட மும்மடங்கு அதிகமாக பயன்களை அளிக்கும் “அஸ்வெசும” திட்டத்தை செயல்படுத்தவும், அரச துறை ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்துவதற்காக தற்போது உதய ஆர்.செனவிரத்ன குழுவின் அறிக்கையை அமுல்படுத்தவும் எம்மால் முடிந்தது.

ஒருபுறம், பொருட்களின் விலையை குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்கவும், வருமானத்தை அதிகரிப்பதன் மூலம் நிவாரணம் வழங்கவும் முடிந்துள்ளது. ஆனால் அதில் இன்னும் இடைவெளி இருக்கிறது.

எனவே, இதை முறையாகக் கையாள்வதன் மூலம் அடுத்த ஆண்டு வாழ்க்கைச் சுமையை வெகுவாகக் குறைக்க முடியும் என்று எதிர்பார்க்கிறோம். நாம் சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறோம். இதையெல்லாம் செய்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவி, எமக்கு கடன் வழங்கிய 18 நாடுகள் வழங்கும் கடன் நிவாரணம் என்பன இன்றியமையாதது. அந்த ஆதரவினால்தான் இன்று இந்த நிலையில் இருக்கிறோம். இந்த இணக்கப்பாடுகளை எங்களால் மாற்ற முடியாது.

சஜித் பிரேமதாச மற்றும் அனுரகுமார திஸாநாயக்க ஆகிய இருவரும் வரிகளை குறைப்பதாக கூறுகின்றனர். அவ்வாறு செய்தால், சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து நாம் பெற வேண்டிய உதவிகளை இழக்க நேரிடும்.

டொலரின் பெறுமதி உயர்ந்து மீண்டும் அனைத்தும் வீழ்ச்சியுறும். அடுத்த 05 ஆண்டுகளில் வலுவான பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும். ஏற்றுமதி பொருளாதாரத்தை நிறுவுவதன் மூலம் நமது வர்த்தகத்தை மேம்படுத்த வேண்டும்.

இங்கிருந்த ஒரு தென்னந்தோப்பை வர்த்தக வலயமாக மாற்றி புதிய பொருளாதாரத்தை அன்று உருவாக்கினோம். அதன் காரணமாக பியகம நகரமும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளும் அதிக எண்ணிக்கையிலான தொழிற்சாலைகளைப் பெற்றன.

பியகமவில் அன்று நான் செய்த முன்னேற்றத்தை முழு நாட்டுக்கும் செய்ய விரும்புகிறேன். அதற்காக பிங்கிரிய, திருகோ
ணமலை, யாழ்ப்பாணம், ஹம்பாந்தோட்டை போன்ற இடங்களில் பாரிய முதலீட்டு வலயங்களை உருவாக்க எதிர்பார்க்கிறோம்.

மல்வானைப் பிரதேசத்தையும் நான் மறக்கவில்லை. கேரகல பிரதேசத்திலும் புதிய முதலீட்டு வலயமொன்றை உருவாக்க எதிர்பார்க்கிறேன். சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் திருகோணமலைக்கு கொண்டு செல்லப்படுவதன் மூலம், அந்தப் பகுதியில் தொழில்நுட்ப வலயத்துடன் கூடிய புதிய நகரத்தை உருவாக்க முடியும். நீங்கள் அங்கு வர்த்தகத்தில் ஈடுபடலாம்.

மேலும், சியாம்பலாப்பே சந்தியில் உத்தேச புதிய வைத்தியசாலையையும் நாம் நிர்மாணிக்க வேண்டும். இவற்றை முன்னெடுப்பதற்காக கேஸ் சிலிண்டர் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க வந்தால் என்ன நடக்கும் என்பதை நான் புதிதாகக் கூற வேண்டியதில்லை. அதனால் நாம் அந்த நிலைக்கு செல்ல வேண்டுமா? நாம் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும். அவர்களுக்கு வாக்களித்து நாட்டை மீண்டும் இழக்காதீர்கள்.

அவர்கள் ஒருமுறை பேரகஸ் சந்தியில் துப்பாக்கிச் சூடு நடத்தினர். மேலும் சிலர் ஐக்கிய மக்கள் சக்திக்குச் செல்கிறார்கள். ஐக்கிய மக்கள் சக்தி என்பது, ஐக்கிய தேசியக் கட்சியல்ல. ஜனாதிபதி பிரேமதாசவும் நானும் இணைந்து செயற்பட்டே “பிரதீபகம” மாதிரிக் கிராமத்தை உருவாக்கினோம்.

அப்போது சஜித் இருக்கவும் இல்லை. எனவே சஜித்துக்கும் நாமலுக்கும் அளிக்கப்படும் வாக்குகள் தட்டில் வைத்து அநுரவுக்கு வழங்கப்படும் வாக்குகள் என்பதைக் கூற வேண்டும்” என்றார்.

மேலும், செப்டெம்பர் 21 ஆம் திகதி, கேஸ் சிலிண்டருக்கு முன்னால் உங்கள் வாக்குகளை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

Social Share

Leave a Reply