காங்கேசன் துறையில் சீமெந்து தொழிற்சாலை – ஆளுநருடன் கலந்துரையாடல்

காங்கேசன் துறையில் சீமெந்து தொழிற்சாலை - ஆளுநருடன் கலந்துரையாடல்

காங்கேசன் துறையில் சீமெந்து தொழிற்சாலையை நிறுவுவது தொடர்பான ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் நேற்று (18.09) நடைபெற்றது. வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தலைமையில், ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில், முதலீட்டு ஊக்குவிப்பு சபையின் யாழ் பிராந்திய சிரேஷ்ட பிரதி பணிப்பாளர் எ.ஆர். ஜெயமனோன், ஆய்வு நிறுவனத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

உள்ளூர் மூலப்பொருட்களை பயன்படுத்தாது, வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மூலப்பொருட்களைக் கொண்டு சீமெந்து தயாரித்துப் பொதி செய்து உள்நாட்டுத் தேவைக்காக விற்பனை செய்யும் நோக்குடன் இந்த செயற்றிட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக, காங்கேசன் துறையில் சீமெந்து தொழிற்சாலைக்கான முதலீட்டை மேற்கொள்ளவுள்ள  ஆய்வு நிறுவனத்தின் பிரதிநிதிகள் ஆளுநரிடம் தெரிவித்துள்ளனர்.

இந்திய முதலீட்டில் மேற்கொள்ளவுள்ள சீமெந்து தொழிற்சாலையில் அதி நவீன இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் எனவும், இதனூடாக உள்ளூர் மக்களுக்குத் தொழில் வாய்ப்பு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

நிதி மூலம், தொழிற்சாலையை நிறுவுவதற்கான காணி கோரிக்கை, மூலப்பொருட்களின் இறக்குமதி, விற்பனை செயற்பாடுகள், செயற்றிட்டத்தை ஆரம்பிப்பதற்கான கால எல்லை, சுற்றாடல் அறிக்கை உள்ளிட்ட அனைத்து விடயங்களும் அடங்கிய முழுமையான முன்மொழிவு திட்டத்தை விரைவாக சமர்ப்பிக்குமாறு தெரிவித்த ஆளுநர், உரிய நடைமுறைகளைப் பின்பற்றி அதனைச் சாதகமான முறையில் பரிசீலிக்கத் தயாராக உள்ளதாகவும் கூறியுள்ளார்.

Social Share

Leave a Reply