ஒரு கிலோ நாடு அரிசியின் மொத்த விலை 225 ரூபாய் சில்லறை விலை ரூபாய் 230
வெள்ளை அரிசியின் மொத்த விலை 215 ரூபாய். சில்லறை விலை 220 ரூபாய்
இறக்குமதி செய்யப்படும் நாடு அரிசி கிலோ 220 ரூபாய்
சம்பா அரிசியின் மொத்த விலை 235 ரூபா.சில்லறை விலை 240 ரூபா
கீரி சம்பா அரிசியின் மொத்த விலை 255 ரூபா. சில்லறை விலை 260 ரூபா
இந்த விலைகளை அனைவரும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டுமெனவும், தவறும் பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நுகர்வோர் அதிகாரசபைக்கு அறிவுறுத்தியுள்ளார் என ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரிசி விலையினை நாளாந்தம் மாற்றுவது தொடர்பில் ஜனாதிபதி கேள்வி எழுப்பிய அதேவேளை நாளாந்தம் அரிசி ஆலைகளிலிருந்து வெளிவரும் அரிசியின் அளவினைக் கணக்கிடுமாறும் நுகர்வோர் அதிகாரசபைக்கு ஜனாதிபதி பணித்துள்ளார்.
ஒரு கிலோ நாடு அரிசியை 225 ரூபா மொத்த விலைக்கும் 230 ரூபா சில்லறை விலைக்கும் விற்பனை செய்யுமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ,அரிசி விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.
இது தொடர்பில் அடுத்த பத்து நாட்களுக்குள் அவதானமாகச் செயற்படுமாறும், இதற்கு முரணாக செயற்படும் அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துமாறும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
வர்த்தக,வணிக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் அரிசி வியாபாரிகளுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (07.12) நடைபெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
நாட்டில் நெடுஞ்சாலைத் துறைக்காகவே அதிகளவில் முதலீடு செய்யப்படுவதாகவும்,அடுத்து நீர்ப்பாசனத் துறைக்கும் விவசாயத் துறைக்குமே அதிக முதலீடு செய்யப்படுவதாகவும் தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, விவசாயிகளுக்கே அதிக நிவாரணங்கள் வழங்கப்படுகிறது எனவும் தெரிவித்தார்.
நெல் கொள்வனவிற்காக வியாபாரிகளுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுவதாகவும் அதனால் மக்களின் அரிசியை நுகரும் உரிமையில் கைவைக்க வேண்டாம் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
வர்த்தக,வணிக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க,ஜனாதிபதியின் செயலாளர் சனத் நந்திக குமாநாயக்க, வர்த்தக,வணிக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஏ.விமலேந்திரராஜா,விவசாய,கால்நடைகள்,காணி,
நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் டீ.பீ.விக்ரமசிங்க,அபிவிருத்தி நிதி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மலர்மதி கங்காதரன், விவசாய திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் கலாநிதி எஸ்.கே.வாசல,நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் ஏ.எம்.யூ.பின்னலந்த, ஹெக்டர் கொப்பேகடுவ கமநல ஆய்வு மற்றும் பயிற்சி நிலையத்தின் பணிப்பாளர் ஏ.எல்.சந்திக்க ஆகியோர் ஜனாதிபதியுடனான சந்திப்பில் கலந்து கொண்டனர்.