2025 ஜனவரி 06 முதல் 2025 ஜனவரி 10 ஆம் திகதி வரை இலங்கையின் பல்வேறு நகரங்களிலும் நடைபெறவுள்ள இந்தியத் திரைப்பட விழாவில் தெரிவுசெய்யப்பட்ட இந்திய திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன. கொழும்பில் உள்ள PVR Cinema இல் 2025 ஜனவரி 06 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 06.30 மணியளவில், பொலிவூட் ஹிட் திரைப்படமான ‘83’ திரையிடலுடன் இத்திரைப்பட விழாவானது ஆரம்பித்துவைக்கப்படவுள்ளது என இந்திய உயர் ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம், கண்டி, ஹம்பாந்தோட்டை மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள அதன் தூதுவராலயங்கள் கொழும்பு சுவாமி விவேகானந்தா கலாசார நிலையத்துடன் இணைந்து ஒழுங்கமைத்த இத்திரைப்பட விழாவில் கதை, காதல், அதிரடி மற்றும் வரலாற்றுக் காவியங்கள் உள்ளடங்கிய சிறந்த திரைப்படத் தொகுப்பு காண்பிக்கப்படவுள்ளன. இந்தத் திரைப்படங்கள் ரசிகர்களுக்கு அவர்களின் பன்முக மரபுகளைப் பற்றிய ஒரு பார்வையை வழங்கி இந்திய சினிமாக்களின் பன்முகத்தன்மை மற்றும் அவற்றின் உணர்வினைக் கொண்டாடுகின்றன,
கொழும்பிற்கு மேலதிகமாக பதுளை, யாழ்ப்பாணம், காலி, குருநாகல், மாத்தளை, மாத்தறை மற்றும் நுவரெலியா ஆகிய இடங்களிலும் இவ்விழா கொண்டாடப்படவுள்ளது. கொழும்பில் நடைபெறும் திரைப்பட விழா குறித்த தகவல்களை கீழே தரப்பட்டுள்ள சிற்றேட்டில் பார்வையிட முடியும். இத்திரைப்பட விழாவிற்கான அனுமதி இலவசம், அனுமதி சிட்டைகளை பெற்றுக்கொள்ள dir.icc.colombo@gmail.com மின்னஞ்சலைத் தொடர்புகொள்ளவும் என இந்திய உயர் ஸ்தானிகராலயம் அறிவுறுத்தியுள்ளது.
திரைப்படங்கள் காண்பிக்கப்படும் இடங்களும் நேரமும் கீழே உள்ள விளம்பரத்தில் உள்ளது.