
வலுவான அரசாங்கத்திற்கு பதிலாக, வரலாற்றில் மிகவும் பலவீனமான அரசாங்கமே இங்கு காணப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம்
சுமத்தியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்தில் நேற்று (14.02) நடைபெற்ற கட்சியின் தேர்தல் தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களுக்கான செயலமர்வு மற்றும் 2025 ஆம் ஆண்டுக்கான தேர்தல் தொகுதி அமைப்பாளர் நியமணப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். நாட்டில் மேற்கொள்ளப்படும் முதலீடுகள் வெளிப்படையான கொள்முதல் முறைகளின்படி இடம்பெற வேண்டும். முதலீட்டாளர்களை அரசாங்கம் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். 2028 ஆம் ஆண்டளவில் நாம் கடனைச் செலுத்த வேண்டும் என்பதால் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.
நாடு செலுத்த வேண்டிய கடனையும் வட்டியையும் செலுத்த வேண்டுமானால் அரசு அதிக வருமானத்தையும், ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி இலக்குகளையும் அடைய வேண்டும்.
அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொண்ட இணக்கப்பாடு மற்றும் சர்வதேச பிணை முறி பத்திரதாரர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் குறித்து ஆராயும் பொருளாதார வல்லுநர்கள், அவர்களுடன் செய்து கொண்டுள்ள இணக்கப்பாடுகளின் இலக்குகளை நாம் அடையாவிட்டால், மற்றொரு கடன் மறுசீரமைப்பிற்கு செல்ல வேண்டியிருக்கும் என்று சுட்டிக்காட்டுகின்றனர்.
பல நிபுணர்கள் IMF ஒப்பந்தங்களை ஆய்வு செய்துள்ளனர். அவர்களது பகுப்பாய்வுகளின் பிரகாரம், IMF உடன்படிக்கைக்கு வந்த 59% நாடுகள் இரண்டாவது அல்லது மூன்றாவது மறுசீரமைப்புக்கு சென்றுள்ளன என வெளிப்படுத்தியுள்ளனர்.
மற்றொரு கடன் மறுசீரமைப்பை நாடுவது நாட்டிற்கு பேரழிவாகும். குறுகிய பிரச்சினைகளை இலக்கு வைத்து ஐக்கிய மக்கள் சக்தி அரசியல் ஆதாயம் தேடாது. நாடு குறித்து சிந்தித்தே செயற்பட்டு வருகிறோம்.
2020 பெப்ரவரியில் ஐக்கிய மக்கள் சக்தி ஒரு கட்சியாக ஆரம்பிக்கப்பட்டது. 7 மாதங்களுக்குப் பிறகு, நாம் ஒரு பொதுத் தேர்தலை எதிர்கொண்டோம். சுதந்திர ஜனநாயக வரலாற்றில் குறுகிய காலத்தில் ஒரு கட்சியாகப் போட்டியிட்டு அதிக எண்ணிக்கையிலான ஆசனங்களையும் வாக்குகளையும் வென்றெடுத்தோம்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் போட்டியிட்டோம். தற்போது உள்ளூராட்சித் தேர்தல் வந்துள்ளது. இதனை நாம் வெற்றிகரமாக எதிர்கொள்வோம்
கட்சிக்கென்று எந்த உறுப்பினர்களும் இல்லாதே கடந்த மூன்று தேர்தல்களிலும் எமது கட்சி பேட்டியிட்டது. அப்போது இருந்த ஐ.தே.க உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மிகுந்த நம்பிக்கையோடு ஐக்கிய மக்கள் சக்தியோடு இணைந்தனர்.
அவர்களில் 74 பேர் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு பதவி பறிக்கப்படது. ஐக்கிய மக்கள் சக்தியினது அல்லது தொலைபேசி சின்னத்தினது பயணமென்பது தற்காலிகமான பயணமல்ல, இது நெடுதூர பயணமென எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.