இந்திய – இலங்கை மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினையை சுமுகமாகத் தீர்க்கும் நோக்கில் இருநாட்டு மீனவ சங்கங்களின் பிரதிநிதிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை இன்று (26.03) இடம்பெறவுள்ளது.
இந்த சந்திப்பில் பங்கேற்பதற்காகத் தமிழக மீனவ சங்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஐவர் நேற்று இலங்கைக்கு வருகைத் தந்துள்ளனர்.
அந்த சங்கத்தின் மற்றுமொரு பிரதிநிதி ஏற்கனவே இலங்கைக்கு வருகைத்தந்துள்ள நிலையில் இன்றைய சந்திப்பில் மொத்தமாக இந்திய மீனவ சங்க பிரதிநிதிகள் அறுவர் பங்கேற்கவுள்ளனர்.
இதேவேளை, வட மாகாணத்தில் உள்ள மீனவ சங்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 12 பேர் இன்றைய கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் குறித்த சந்திப்பு வவுனியாவில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இடம்பெறவுள்ளது.
இதேவேளை, எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபடும் இந்திய மீனவர்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் பாதுகாப்பு செயலாளர் மற்றும் கடற்படைத் தளபதி ஆகியோருடன் கலந்துரையாடவுள்ளதாகக் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
நேற்று இடம்பெற்ற யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.