பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தலைமறைவாக இருப்பதற்கு உதவிய குற்றச்சாட்டில் கான்ஸ்டபிள் ஒருவர் உள்ளடங்களாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேசபந்து தென்னகோனை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த போதும் பெப்ரவரி 27 ஆம் திகதி முதல் மார்ச் 19 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அவர் தலைமறைவாகியிருந்தார்.
அவர் தலைமறைவாக இருப்பதற்கு உதவிய குற்றச்சாட்டில் விசேட பாதுகாப்புப் படையில் பணிபுரியும் கான்ஸ்டபிள் ஒருவரும்,தலவத்துகொட பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 03ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தேசபந்து கண்டி தும்பரை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
2023 ஆம் ஆண்டு மாத்தறை, வெலிகமவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டின் போது கொழும்பு குற்றப்பிரிவின் பொலிஸ் சர்ஜன்ட் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் அப்போதைய பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உட்பட 08 பொலிஸ் அதிகாரிகளை கைது செய்யுமாறு மாத்தறை நீதவான் கடந்த பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி உத்தரவு பிறப்பித்திருந்தார்.