வவுனியாவில் நீச்சல் தடாகத்தில் மூழ்கி பலியான இளைஞன்

வவுனியா, தவசிகுளம் பகுதியில் அமைந்துள்ள நீச்சல் தடாகத்தில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் நீரில் முழ்கி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று (14.04) மாலை இடம்பெற்றுள்ளது.

தவசிகுளம் பகுதியில் அமைந்துள்ள நீச்சல் தடாகத்திற்கு தனது உறவினர்களுடன் வருகை தந்திருந்த நிலையில் குறித்த இளைஞர் நீச்சல் குளத்தில் இறங்கி குளித்துள்ளார்.

இதன்போது, அவர் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இளைஞரை மீட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் கண்டி, நாவலப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 18 வயதான இளைஞரே உயிரிழந்துள்ளார்.

நாவலப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞர் வவுனியா, சிதம்பரபுரம் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டில் இருந்து வர்த்தக நிலையம் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார்.

குறித்த இளைஞரின் சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்காக பிரதே அறையில் வைப்பதற்கு வவுனியா வைத்தியசாலையின் பிரேத அறையில் இருந்த குளிரூட்டி கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக இயங்காமையால் சடலத்தை அங்கு வைக்க முடியவில்லை.

இதனால் செட்டிகுளம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்று ஒப்படைக்குமாறும், மறுநாள் இன்று (15.04) மீண்டும் வவுனியா வைத்தியசாலைன்கு கொண்டு வருமாறும் வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த இளைஞரின் குடும்பத்தினர் தமது குடும்ப நிலை காரணமாக சடலத்தை செட்டிகுளம் வைத்தியாலைக்கு கொண்டு செல்ல வாகனத்தை வாடகைக்கு அமர்த்த முடியாத நிலையில் அவதிப்பட்டனர்.

சம்பவம் தொடர்பில் செய்தி அறிக்கையிடச் சென்ற ஊடகவியலாளர்கள் குறித்த குடும்பத்தின் நிலமையை அறிந்து, வன்னி மாவட்ட ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் அவர்களின் கவனத்திற்கு குறித்த விடயத்தை கொண்டு வந்திருந்தனர்.

இதனையடுத்து உடனடியாக வவுனியா வைத்தியசாலைக்கு வருகை தந்த நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன், இறந்த இளைஞரின் உறவினர்களுடன் கலந்துரையாடியதுடன், சம்பவம் தொடர்பில் கேட்டறிந்த பின் வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளரின் கவனத்திறகு குறித்த விடயத்தை கொண்டு வந்ததுடன், வைத்தியசாலையால் பொறுப்பேற்கப்பட்ட சடலத்தை செட்டிகுளம் அனுப்பி அதனை மீள பெற வேணடியது வைத்தியசாலையின் பொறுப்பு எனத் தெரிவித்திருந்தார்.

அத்துடன் வவுனியாவின் பிரதான வைத்தியசாலையின் பிரேத அறை குளிரூட்டி நீண்ட நாளாக பழுதடைந்து இருந்தால் ஏன் நடவடிக்கை எடுக்கவிலலை எனவும் விளக்கம் கோரியிருந்தார்.

இதனையடுத்து வைத்தியசாலையால் சடலம் பொறுபேற்கப்பட்டு செட்டிகுளம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இன்றைய (15.04) உடற்கூற்று பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்.

சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

Social Share

Leave a Reply