தரமற்ற நிலக்கரி காரணமாக நேற்று 45 இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் இவ்வாறான மின்வெட்டு எதுவும் நிகழவில்லை என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தாங்கள் மறுப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
தரமற்ற நிலக்கரி மின்உற்பத்தியை பாதிப்பதால் சில வாரங்களுக்குள் மின்வெட்டு ஏற்படும் என இரண்டு வாரங்களுக்கு முன்பே பாராளுமன்றத்தில் எச்சரித்ததாகவும், எந்த விதமான முறையான அனுமதியும் இன்றி 45 மின்விநியோக பாதைகள் (feeders) ஒரே நேரத்தில் துண்டிக்கப்பட்டதால் பல பகுதிகளில் மின்தடை ஏற்பட்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதே சமயம், இந்த நிலையை அரசு “மின்கோளாறு” என விவரித்ததாகவும், ஆனால் இலங்கை மின்சார சபை கட்டுப்பாட்டு மைய அறிக்கையில் இது மின்உற்பத்தி பற்றாக்குறையால் செய்யப்பட்ட “manual load shedding” என வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“Manual load shedding” என்பது தெரிவு செய்யப்பட்ட பகுதிகளில் மின்சாரத்தை துண்டிப்பதையே குறிக்கிறது என்றும், அது நேரடியாக மின்வெட்டாகும் என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
மேலும், தரமற்ற நிலக்கரியின் காரணமாக சுமார் 150 மெகாவாட் மின்உற்பத்தி இழப்பு ஏற்பட்டதாகவும், இதனால் அதிகாரிகள் மின்விநியோக பாதைகளை கைமுறையாக துண்டிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும், இது இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதி பெறாமல் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுவதாகவும், குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.