அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் மெலானியா டிரம்ப் ஆகியோர் கலந்துகொண்ட, வாஷிங்டன் ஹில்டனில் நடைபெற்ற வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் இரவு விருந்துக்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தியவர் குறித்த பல தகவல்களை வெளிநாட்டு ஊடகங்கள் தற்போது வெளியிட்டுள்ளன.
அதன்படி, சந்தேக நபர் கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் தென்மேற்கு புறநகர்ப் பகுதியைச் சேர்ந்த 31 வயது நபர் என்பது தற்போது தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் தற்போது அருகிலுள்ள மருத்துவமனையில் காவல்துறை பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருவதாக வாஷிங்டன் டி.சி. மேயர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், சந்தேக நபர் பல துப்பாக்கிகளையும் கத்திகளையும் ஹோட்டல் வளாகத்திற்குள் எடுத்துச் சென்று பலமுறை சுட்டதாக வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வெள்ளை மாளிகையில் ஊடகங்களுக்கு அளித்த ஒரு சுருக்கமான அறிக்கையில், இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்கு முன்பு தனது குழுவுக்கு எந்தப் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்தும் தெரியாது என்று கூறினார்.
இருப்பினும், இந்த உரையாடலில் டிரம்ப் செய்தியாளர்களிடம், சந்தேக நபர் ஒரு குழுவைச் சேர்ந்தவர் அல்ல, மாறாக ஒரு தனிநபர் என்று கூறினார்.
இதற்கிடையில், அமெரிக்கப் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மீது விரைவில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என அமெரிக்க தலைமை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.