இலங்கையில் “ஒரே நாடு, ஒரே சட்டம்” தொடர்பான ஜனாதிபதி செயலணிக்கு கருத்துக்களைச் சேர்ப்பதற்காகப் பெருந்தொகையான சிவில் அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் இணைந்து கொண்டுள்ளதாக, குறித்த அமைப்பின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
பொது மக்களின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்காக கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நிறுவப்பட்ட உத்தியோகபூர்வ அலுவலகத்துக்கு வந்து கருத்துக்களைத் தெரிவிப்பதற்கு, டிசம்பர் 20ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது.
அதற்கமைய இந்நாட்களில், மதத் தலைவர்கள், சிவில் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், வர்த்தகர்கள், தொழில் வல்லுநர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், முஸ்லிம் மற்றும் பௌத்த மத அமைப்புகள் மற்றும் பல்வேறு மாகாணங்களைச் சேர்ந்த சிவில் அமைப்புகள், மகளிர் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர், உத்தியோகபூர்வ அலுவலகத்துக்கு வருகை தந்ததாக அவர் தெரிவித்தார்.
வடக்கு, கிழக்கு உட்பட பெரும்பாலான மக்கள், இந்தக் கருத்து யதார்த்தமாக மாறுவதைக் காண மிகவும் ஆவலுடன் இருப்பது, நாட்டின் அபிவிருத்திக்கு ஒரு சக்திவாய்ந்த தூண்டுகோலாகும் எனவும் தெரிவித்த அவர், தனிப்பட்ட முறையில் மற்றும் நிறுவன ரீதியாக தங்கள் கருத்துக்களைத் தொடர்ந்து தெரிவிக்க விரும்பும் அனைவருக்கும் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது என்றார்.