அத்தியாவசிய பொருட்களின் விலைகளை கட்டுப்படுத்துவதென்பது சாத்தியப்படாத விடயம் என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
அமைச்சரவையில் நேற்று (04/01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் விளக்கமளிக்கையில், அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடுகளை தவிர்க்கும் வகையில் வரி நீக்கம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் விலைகளை மாத்திரம் கட்டுப்படுத்துவது என்பது சாத்தியப்படாத ஒன்று.
பொருட்களுக்கான விலை அதிகரிப்பு என்பது இலங்கையில் மாத்திரம் ஏற்பட்டுள்ள பிரச்சினையல்ல. மாறாக ஏனைய உலக நாடுகளும் இந்த பிரச்சினையை எதிர்கொண்டுள்ளது.
அத்துடன் எமது ஏற்றுமதி போகங்களின் விலை அதிகரித்துள்ளது மாத்திரமன்றி, உலக சந்தையிலும் பொருட்களின் விலை அதிகரித்துள்ளன.
நாட்டில் பொருட்களுக்குத் தட்டுபாடு ஏற்படும் போது அவற்றை இறக்குமதி செய்வதன் மூலம் விலைகள் கட்டுப்படுத்தப்படும். எனினும் உலகளவில் இன்று விநியோகமும் முற்றாக சரிவடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
