இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் கிடைக்கும் எரிபொருள் விலையை விட குறைந்த விலையில் எரிபொருளை விற்பனை செய்வதற்காக நாட்டிற்குள் வரவுள்ள வெளிநாட்டு எரிபொருள் நிறுவனங்களுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கையில் எரிபொருளை விற்பனை செய்வதற்கு மூன்று நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், அது தொடர்பான ஒப்பந்தங்கள் தொடர்பான பணிகள் இம்மாத இறுதியில் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் சினோபெக், ஆஸ்திரேலியாவின் யுனைடெட் பெட்ரோலியம் மற்றும் அமெரிக்காவின் ஆர்.எம். பார்க்ஸ் என்ற மூன்று நிறுவனங்களுக்கு இலங்கையில் எரிபொருள் சில்லறை விற்பனை சந்தையில் நுழைவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விலையை விட கணிசமான அளவு குறைந்த விலையில் எரிபொருளை விற்பனை செய்வதற்கு குறித்த நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, இது தொடர்பில் இருதரப்பின் கலந்துரையாடல்களுக்கு பின்னர் சிறந்த தீர்வு எட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்நிலையில், போட்டிச் சந்தை உருவாகி, கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் தேவை குறைந்து, நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி நிலைமை தணியும் என எரிசக்தி அமைச்சு கணித்துள்ளது.
அரசாங்கம் தற்போது எரிபொருள் இறக்குமதிக்காக சராசரியாக மாதாந்தம் 450 மில்லியன் டொலர்களை செலவிடுவதாகவும், மூன்று புதிய நிறுவனங்கள் தலா 120 மில்லியன் டொலர் வீதம் எரிபொருளை இறக்குமதி செய்யும் என எதிர்பார்ப்பதாகவும் எனவே எரிபொருள் இறக்குமதி செலவை குறைக்க முடியும் என கூட்டுத்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது.