பயங்கரவாத தடை சட்டம் மாற்றங்களுடனேயே பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படுமெனவும் அது தொடர்பில் யாரும் பயப்படவோ, அச்சுறுத்தலாக அமையுமென்றோ யோசிக்க தேவையில்லை என சட்டத்துறை அமைச்சர் விஜயதசாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சர்வதேச ரீதியிலும், உள்ளூரிலும் இது தொடர்பில் அதிருப்தி வெளியிடப்பட்டு வரும் நிலையில், அது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் கலந்துரையாடல்கள் மூலம் அவற்றில் மாற்றங்களை ஏற்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
1979 ஆண்டு அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்தனவினால் பயங்கரவாத தடை சட்டம் அமுல் செய்யப்பட்டதாகவும், அப்போது தலையெடுத்து பிரிவினைவாதத்தை தடுக்கவுமே இந்த சட்டம் கொண்டுவரப்பட்டதாகவும், ஆனால் அதன் பின்னர் அது ஆட்சியாளர்களின் தனிப்பட்ட காரணங்களுக்கும், அரசியல் பழிவாங்கல்களுக்காக பாவிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார். அதன் காரணமாகவே கடுமையான சட்டமாக கருதப்படும் இந்த சட்டத்தை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.
இந்த மாற்றங்களுடன் வரும் சட்டத்தில் மக்களின் உரிமைகள் மீறப்பட்டு, ஜனநாயகம் பறிக்கப்படுமாக இருந்தால் அரசாங்கமே அதனை வெளிப்படுத்தும் எனவும், பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த பின்னர் எந்தவொரு குடிமகனோ, அரசியல் கட்சியோ, அமைப்புக்களோ உயர் நீதிமன்றம் சென்று முறையிட முடியுமென விஜயதாஸ ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் பயங்கரவாதத்தை முறியடிக்கும் முகமாக மனித மற்றும் அரசியல் உரிமைகளை காக்கும் முகமாக சர்வதேச மரபுகளுக்கும், உடன்படிக்கைகளுக்கும் அமைவாகவே இந்த புதிய பயங்கரவாத தடை சட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக மேலும் அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.
