மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சமூக மற்றும் பொருளாதார பாதுகாப்புக்கு சர்வதேச தொழிலாளர் சம்மேளனத்தின் (ILO) பங்களிப்பும் அவசியம். அதற்கான உரிய தலையீடுகளை மேற்கொள்ளுமாறு சர்வதேச தொழிலாளர் சம்மேளனத்தின் உயர்மட்ட பிரதிநிதிகளிடம் தெரிவித்ததாக தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
சர்வதேச தொழிலாளர் சம்மேளனத்தின் உயர்மட்ட பிரதிநிதிகளுக்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸினருக்கும் இடையிலான சந்திப்பு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமையகமான சௌமிய பவனில் இன்று (10.05.2023) நடைபெற்றது.
சர்வதேச தொழிலாளர் சம்மேளனத்தின் சார்பில் இலங்கைக்கான பணிப்பாளர் சிம்ரின் சிங், ஆசிய பசுபிக் பிராந்தியத்துக்கான பிரதிநிதி ஏரியல் கெஸ்ட்ரோ, நிபுணர் ஷைட் சுல்தான் அகமட் ஆகியோரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சார்பில் தலைவர் செந்தில் தொண்டமான், நிர்வாக செயலாளர் விஜயலக்ஷமி தொண்டமான், தொழிற்சங்க பிரிவின் சிரேஷ்ட பணிப்பாளர் எஸ்.ராஜமணி ஆகியோரும் பங்குபற்றியுள்ளார்கள்.
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் உட்பட தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், அவர்களுக்கான பாதுகாப்பு பொறிமுறை, சர்வதேச தொழில் சம்மேளனத்தின் வகிபாகம் உள்ளிட்ட விடயங்கள் சம்பந்தமாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளன. பெருந்தோட்டத் தொழிலாளர்கள் விவகாரத்தில் ILO வழங்கிவரும் ஒத்துழைப்புகளுக்கு நன்றி தெரிவித்ததாகவும், எதிர்காலத்திலும் ஒத்துழைப்புகள் அவசியம் எனவும் கோரிக்கை விடுத்ததாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் மேலும் கூறியுள்ளார்.