Fa Xian Charity Project தொண்டு திட்டத்தின் கீழ், இலங்கையில் உள்ள தேவையுடைய ஏழை மக்களுக்கு சீனாவின் பௌத்த சங்கத்தின் (Buddhist Association of China) பங்கேற்புடன் சீனாவின் பௌத்த விகாரைகள் மற்றும் பௌத்த மக்களால் வழங்கப்பட்ட நன்கொடை மூலம் கிடைத்த நிதியில் உலர் உணவு பொதிகள் வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் (05.11) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் பிற்பகல் 2.00 மணிக்கு முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் முல்லைத்தீவு ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கைக்கான சீனத் தூதுவர் H.E Qi Zhenhong அவர்கள் கலந்து கொண்டு முதற்கட்ட உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்துள்ளார். இந்நிகழ்வில் இலங்கைக்கான சீனத் தூதரக அதிகாரிகள் , இலங்கை – சீனா பௌத்த நட்புறவு சங்க உறுப்பினர்கள் மாவட்ட பிரதம உள்ளக கணக்காய்வாளர் க.லிங்கேஸ்வரன், மாவட்ட பதில் திட்டமிடல் பணிப்பாளர் க.ஜெயபவானி, கரைத்துறைப் பற்று பிரதேச செயலாளர், உதவி பிரதேச செயலாளர் மற்றும் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
