பிள்ளைகள் மற்றும் பெற்றோர்களின் அழுத்தத்தை குறைக்கும் வகையில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை அடுத்த ஆண்டு முதல் எளிமைப்படுத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
புலமைப்பரிசில் பரீட்சையில் எழுத்தறிவு மற்றும் எண் திறனை அளவிடுவதற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் புலமைப்பரிசில் சித்திகளைப் போன்று 4ஆம் மற்றும் 5ஆம் தர வகுப்பிலும் முப்பது வீதமான புள்ளிகளைப் பெற வேண்டும் எனவும், அதற்காக பிள்ளைகள் தொடர்ச்சியாக பாடசாலைக்குச் செல்வதும் அவசியம் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் பல முன்மொழிவுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அந்த முன்மொழிவுகளும் தற்போது ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த பரீட்சை பிள்ளைகளின் மனதில் பெரும் சுமையாக இருப்பதாக கல்வியாளர்களும் மனநல நிபுணர்களும் நீண்டகாலமாக அரசாங்கத்திடம் சுட்டிக்காட்டி வரும் நிலையிலேயே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அடுத்த வருடம் கல்வி திட்டத்தில் மேலும் பல மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.