ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வடக்கிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இதன்படி, இன்று முதல் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை வட மாகாணத்திற்கான விஜயத்தினை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஜனாதிபதியின் யாழ் விஜயத்தின் போது எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதை தடுக்கக் கோரி அம்மாவட்ட பொலிஸார் விடுத்திருந்த கோரிக்கையை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
சட்டத்தை மீறாத வகையில், ஜனநாயக ரீதியில் எதிர்ப்பில் ஈடுபடுவதற்கான உரிமை உள்ளதாக நீதிமன்றம் இதன்போது அறிவித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதற்கு தடை விதிக்கக் கோரி யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் பொலிஸார் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன், தவத்திரு வேலன் சுவாமிகள், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
நீதிமன்றம் நேற்று பிற்பகல் பிறப்பித்திருந்த உத்தரவிற்கமைய, வழக்கின் 8 ஆவது பிரதிவாதியான தவத்திரு வேலன் சுவாமிகள் நீதிமன்றத்தில் முன்னிலையாகி தமது நிலைப்பாட்டினை தெளிவுபடுத்தியிருந்தார்.
இதனையடுத்து நீதிமன்றம் பொலிஸாரின் கோரிக்கையை நிராகரித்தமை குறிப்பிடத்தக்கது.