கடந்த சில தினங்களில் 300,000 க்கும் மேற்பட்ட மின் தடை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், சில நாட்களில் ஒரு மணி நேரத்திற்குள் 30,000 க்கும் அதிகமான மின் தடைகள் ஏற்பட்டுள்ளதாகவும் இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட மின் தடைகளை சரி செய்யும் நடவடிக்கைகளில் தாமதத்தை எதிர்நோக்குவதாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின் தடைகளை சரி செய்யும் தொழில்நுட்ப பணியாளர்களின் எண்ணிக்கை குறைவாக காணப்படுகின்றமையே தாமதத்திற்கான காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மின் தடைகளை தொடர்பில் பொது மக்களிடமிருந்து அதிகளவு தொலைபேசி அழைப்புக்கள் வருகின்றமையினால், நுகர்வோரின் பல தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்க இயலவில்லை என மின்சார சபை பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்களுக்கு பொறுமையுடனும் எச்சரிக்கையுடனும் செயற்படுமாறு வலியுறுத்தியுள்ளதுடன், மின்தடையின் போது மின் கம்பிகளையும் தொட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மின்சார தடைகளை விரைவாக சரி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.