இலங்கையில் உள்ள சில சுற்றுலாப் பகுதிகளிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேலியர்களுக்கு அந்நாட்டு பாதுகாப்புச் சபை இன்று (23.10)அறிவுறுத்தியுள்ளது.
குறிப்பாக அம்பாறை மாவட்டம் பொத்துவிலில் அமைந்துள்ள கடற்கரைப் பிரதேசமான அறுகம்பை, இலங்கையின் தெற்கு மற்றும் மேற்கில் உள்ள கடற்கரைகள் பகுதிகளிலிருந்து வெளியேறுமாறு இஸ்ரேலியர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அத்துடன் இலங்கையிலிருந்து வெளியேறுமாறும் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன் இயலுமானவரை தலைநகர் கொழும்பிற்குச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் இலங்கையில் உள்ள பாதுகாப்பு அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளதாக அந்நாட்டு பாதுகாப்புச் சபை தெரிவித்துள்ளது.
அறுகம்பை வளைகுடா பகுதியில் உள்ள பிரபல சுற்றுலாத் தலங்களை இலக்குவைத்து தாக்குதல் நடத்தப்படும் என நம்பத்தகு வட்டாரத்தில் தகவல் கிடைத்ததாகவும் இதனால் ஆபத்து நேரிடலாம் என அச்சம் வெளியிடப்பட்டதுடன் மறு அறிவித்தல் வரை அந்த பகுதிக்கு செல்ல அமெரிக்க பிரஜைகளுக்கு அமெரிக்க தூதரகம் பயணத்தடை விதித்தது.
இதனைத் தொடர்ந்து பிரித்தானியா, நியூசிலாந்து மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் தமது நாட்டு பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.