கடலை பாதுகாக்க சாணக்கியனின் அறிவுரை

கடற்கரைகளில் ஒதுங்கும் மருத்துவ கழிவுகளை அகற்றுவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கோப் குழு கூட்டத்தில் ஆலோசனை வழங்கியதாக தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையான “டைனமைட் மீன்பிடி” முறை காரணமாக கடல்வளமானது பாதிக்கப்படுவதாகவும், குறிப்பாக பவளப்பாறைகள் மற்றும் மீனின் இனப்பெருக்கமும் பாதிக்கப்படுவதாகவும், இதன் காரணமாக இனிவரும் காலங்களில் மீன்வளம் குறைவடையக் கூடிய சந்தர்ப்பங்கள் காணப்படுவதாகவும் தெரிவித்த சாணக்கியன், இந்த விடயம் தொடர்பில் கடல் சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அறிவுறுத்தலையும் வழங்கியுள்ளார்.

பிளாஸ்டிக் உள்ளடங்கலான கடலில் கொட்டப்படும் கழிவுகளை துப்பரவு செய்யும் உபகரணம் தற்போது மட்டக்களப்பு காத்தான்குடி நகர சபையில் மாத்திரமே காணப்படுகின்றது. எனவே இதனை வடக்கு கிழக்கிலுள்ள பிரதேச சபைகளுக்கு வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை மிக விரைவில் முன்னெடுக்க வேண்டும்.

மேலும் திருக்கோவில் இல்மனைட் அகழ்விற்கான அனுமதியினை கடல்சார் திணைக்களங்களிடமும் இருந்து பெற்றுக்கொள்வது மிக அவசியம் எனவும் ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவித்த சாணக்கியன் MP . அதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்துவதாக கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது எனவும் மேலும் தெரிவித்தார்.

கடலை பாதுகாக்க சாணக்கியனின் அறிவுரை

Social Share

Leave a Reply