தற்போதைய பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கு தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்தில் உள்ள நாடுகள் இலங்கைக்கு வழங்கிய ஆதரவையும் உதவியையும் ஜனாதிபதி பாராட்டியதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
புவியியல் நெருக்கத்தின் அடிப்படையில் இலங்கைக்கும் பிராந்திய நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலா, முதலீட்டு வாய்ப்புகள், விவசாய அபிவிருத்தி, கல்வி மற்றும் ஏனைய பல்வேறு துறைகள் குறித்து ஜனாதிபதி தூதுக் குழுவின் தலைவர்களுக்கு நேற்று (22.06) பிற்பகல் கோட்டை ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற சந்திப்பில் ஜனாதிபதி விளக்கமளித்தார்.
பல்வேறு துறைகளில் தென்கிழக்காசியப் பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கு இலங்கை ஏற்றுமதி செய்யக்கூடிய பண்டங்கள் மற்றும் பொருட்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
மியன்மார் தூதுவர் (Han Thu), மலேசிய உயர்ஸ்தானிகர் (Tan Yang Thai), வியட்நாம் தூதுவர் (Ho Thi Thanh Truc), தாய்லாந்து தூதுவர் (Poj Harnpol), இந்தோனேசிய தூதுவர் (Dewi Gustina Tobing) ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி அனுர திஸாநாயக்க மற்றும் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.
