வாகன விபத்துகளில் சிக்கி 6 பேர் பலி!

நாட்டில் பல பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் சிறு பிள்ளை உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

குளியாபிட்டிய – நாரம்மல வீதியில் பொஹிங்கமுவ பிரதேசத்தில் வீதியோரம் நடந்து சென்ற 11 வயதுடைய சிறு பிள்ளை மீது கார் மோதியதில் பலத்த காயமடைந்த பிள்ளை, வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கிதலாவ பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, நுவரெலியா பேருந்து நிலையத்திற்குள் நுழைய முற்பட்ட பாதசாரி மீது பேருந்து மோதியதில் ஏற்பட்ட விபத்தில் குறித்த பாதசாரி உயிரிழந்துள்ளார்.

எல்ல – வெல்லவாய வீதியின் அம்வத்த பகுதியில் நாய் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதி மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழந்துள்ளார்.

மேலும், அக்கரைப்பற்று – பொத்துவில் வீதியில் முகத்துவாரம் பாலத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் சாரதி உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, இரத்தினபுரி – பெல்மதுல்ல வீதியின் படுகெதர பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி கொங்கிறீட் தூணில் மோதியதில் பலத்த காயமடைந்த சாரதி இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், வெல்லவாய – தனமல்வில வீதியில் தெள்ளுல்ல கொலனி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வேன் ஒன்று வீதியை விட்டு விலகி மரத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன் இதன்போது விபத்தில் படுகாயமடைந்த வேனின் சாரதி உயிரிழந்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version