ஜனவரி 02 ஆம் திகதி தொடக்கம் 04 ஆம் திகதிக்கிடையில் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் வேட்பு மனு கோரலுக்கான வர்த்தமானி அறிவிக்கப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் நிமால் புஞ்சிஹேவா கூறியுள்ளார்.
மாவட்ட செயலகங்கள் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் கடந்த வியாழக்கிழமை கூட்டம் ஒன்றை தேர்தல்கள் ஆணைக்குழு நடாத்தி சகல விடயங்கள் தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்டது. தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்ததும் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் விண்ணப்பங்களை பெற்று கையளித்தல் தொடர்பிலான முழுமையான விபரங்கள் அடங்கிய வர்த்தமானி வெளியிடப்படும்.
இம்முறை தேர்தல் வார நாட்களில் நடைபெறுமெனவும், 10 பில்லியன் ரூபாய்க்கு உள்ளடங்கலாக நடாத்தப்படுமெனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் தெரிவித்துள்ளார். தேர்தல் பணிகளுக்காக இம்முறை குறைந்தளவிலான அதிகாரிகளே பாவிக்கப்படுவார்கள் எனவும், செலவுகள் கட்டுப்படுத்தப்படுமெனவும் தெரிவித்துள்ளார்.
புள்ளிவிபரங்களை திரட்டுவதில் தாமதம் ஏற்பட்டதன் காரணமாகவே இந்த வாரம் வெளியிடப்படவிருந்த வர்த்தமானி அறிவிப்பு ஜனவரி மாதத்துக்கு பின் சென்றுள்ளது. எல்பிட்டிய பிரதேச சபை தவிர்ந்த 340 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலுக்கான அறிவிப்பாகவே இந்த அறிவிப்பு வெளியிடப்படவுள்ளது.
பதிவு செய்யப்பட்ட கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்ட நாளிலிருந்து 14 நாட்களுக்குள் விண்ணப்பம் கையளிக்கப்படவேண்டும். இம்முறை தேத்தலில் வாக்களிக்க ஒரு கோடியே 60 இலட்சம் பேர் தகுதி பெற்றுள்ளனர்.
