முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனின் இல்லத்திற்குச் சென்று அவரது நலம் விசாரித்ததுடன் தமிழ்த் தேசியப் பிரச்சினை குறித்தும் கலந்துரையாடியுள்ளார்.
இந்த விஜயத்தின் போது வடக்கு, கிழக்கில் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் தமிழ்த் தேசியப் பிரச்சினை போன்றவற்றை முன்வைத்த சம்பந்தன், வடக்கு கிழக்குப் பிரச்சினைக்கு அரசாங்கம் விரைவில் தீர்வு காண வேண்டும் எனவும் தெரிவித்தார்.
வடக்கு கிழக்கு பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்துடன் கலந்துரையாடி இணக்கமான தீர்வை எட்டுவதற்கு முயற்சிப்பதாக மஹிந்த ராஜபக்ஷ சம்பந்தனிடம் உறுதியளித்துள்ளார்.
விரைவில் நடைபெறவுள்ள மூன்று நாள் அனைத்துக் கட்சி மாநாட்டில் தனது கட்சியான SLPP கலந்துகொள்ளும் என்றும், அதன்போது தமிழ்க் கட்சிகளின் கோரிக்கைகள் குறித்து விவாதித்து நேர்மறையான முறையில் ஆய்வு செய்ய தாம் நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
