ATM இயந்திரங்களிலிருந்து ஒரு கோடி ரூபாவிற்கும் அதிகமான பணம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் உத்தியோகத்தர், இரண்டு வெளிநாட்டவர்கள் உட்பட 5 சந்தேக நபர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள இரு வெளிநாட்டவர்களும் பல்கேரிய பிரஜைகள் எனவும் அதில் ஒருவர் கனேடிய குடியுரிமை பெற்றவர் எனவும் தெரியவந்துள்ளது.
கொழும்பில் உள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த இரு வெளிநாட்டவர்களும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் மீகஹதென்ன காவல்துறையின் நிலைய பொறுப்பதிகாரியும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிடிகல பொலிஸ் பிரிவுக்குற்பட்ட அமுகொட பிரதேசத்திலேயே குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏனைய இரு சந்தேகநபர்களும் எல்பிட்டிய மற்றும் நீர்கொழும்பு பகுதிகளில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.