இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு மாற்றப்படவுள்ளதாக விளையாட்டு துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க நேற்று(31.01) தெரிவித்துள்ளார். பொருத்தமானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
நேற்றைய தினம் விளையாட்டு துறை அமைச்சில், அமைச்சர், அமைச்சின் செயலாளர் மகேசன், தேசிய விளையாட்டு குழுவின் தலைவர் அர்ஜுனா ரணதுங்க ஜெனரல் ஷவேந்திர சில்வா, அந்த குழுவின் உறுப்பினர் சனத்ஜெயசூரியா ஆகியோர் அடங்கிய குழுவினர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.
இதன் போது கருத்து தெரிவித்த அர்ஜுனா ரணதுங்க தான் கிரிக்கெட் சபை தொடர்பில் எந்தவித கருத்தும் கூற விரும்பவில்லை எனவும், ஆனால் தெரிவுக்குழு சரியாக அமையவேண்டுமென கூறியுள்ளார். இலங்கை அணியில் நல்ல வீரர்கள் உள்ளனர். அவர்களை சரியாக இனம் கண்டு வழிநடத்த வேண்டும். அதற்கு சரியான ஒரு தெரிவுக்குழு வேண்டுமென அவர் கூறியுள்ளார். அத்தோடு பல வீரர்கள் வெளிநாடுகளில் தற்போது விளையாடி வருவதாகவும் அது தொடர்பிலும் தெரிவுக்குழுவினர் கவனம் செலுத்த வேண்டுமெனவும் மேலும் கூறியுள்ளார்.
மேலும் நடைபெற்ற சந்திப்பின் போது, இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தினை தடை செய்ய அல்லது கலைக்க போதுமான ஆதாரங்கள் உள்ளன. இருப்பினும் சட்ட மா அதிபர் திணைக்களம், விளையாட்டு துறை அமைச்சரினால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவின் அறிக்கையினை கணக்காய்வு நினைக்களத்துக்கு அனுப்பி அதனை பரிசோதனை செய்து உறுதி செய்யுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அவ் அறிக்கை வெளியாகியதன் பின்னர் மேலதிக நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பபடுமென கூறியுள்ளார்.