கோடீஸ்வர வர்த்தகர் கொலை – விசாரணைகள் ஆரம்பம் (Update)

மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட கோடீஸ்வர வர்த்தகரின் மரணம் தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலையாளிகள் தற்போது நாட்டை விட்டு தப்பிச் சென்றிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

நேற்று (02.02) கொழும்பில் பிரபல ஆடை விற்பனை நிலையத்தின் உரிமையாளரான ரொஷான் வன்னிநாயக்கவின் சடலம் பத்தரமுல்லை பெலவத்தை பகுதியில் உள்ள மூன்று மாடி வீடொன்றின் நீச்சல் தடாகத்தில் மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

பரிசோதனைகளில் நீச்சல் தடாகத்தின் அருகில் இரத்தக் கறைகள் காணப்பட்டதால், இது கொலையாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

அங்கு நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணைகளின்படி, அவர் தலையில் அடித்து கொலை செய்யப்பட்டு, பின்னர் உடலை இழுத்துச் சென்று நீச்சல் தடாகத்தில் வீசியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சடலமாக மீட்கப்பட்ட தொழிலதிபர் 50 வயதுடையவர் எனவும், அவர் திருமணமாகாதவர் எனவும் தெரியவந்துள்ளது.

மேலும், குறித்த நபர் வெல்லம்பிட்டிய, கிட்டம்பஹுவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்து, இந்த மூன்று மாடி வீட்டை திருத்தியமைத்து வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கடந்த ஜனவரி 30ம் திகதி மாலை 5.30 மணியளவில் வெல்லம்பிட்டியில் உள்ள தனது இல்லத்திலிருந்து தனக்குச் சொந்தமான காரில் புறப்பட்டு சென்றுள்ளார். அன்றைய தினம் மாலை 7 மணியளவில் சகோதரி மரணமடைந்த தொழிலதிபருக்கு பல தொலைபேசி அழைப்புகள் மேற்கொண்ட போதிலும் அவர் அதற்கு பதிலளிக்கவில்லை என தன சகோதனை காணவில்லை என போலீசாரிடம் முறைப்பாடு செய்த அவரது சகோதரி தெரிவித்துள்ளார்.

இரவு உணவை தயாரிப்பதற்காக தனது சகோதரருக்கு தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டதாக குறித்த நபரின் சகோதரி பொலிஸாரிடம் மேலும் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த வர்த்தகர் தனது சகோதரிக்கு 7.29 அளவில் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அழைப்பின் பின்னர், அவரது சகோதரி தனது சகோதரனின் தொலைபேசி செயலிழந்துள்ளதாகவும், அவர் காணவில்லை எனவும் வெல்லம்பிட்டிய பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

சந்தேகத்தின் அடிப்படையில், பெலவத்தை பகுதியில் உள்ள வீட்டிற்குச் சென்ற சகோதரி உட்பட குடும்பத்தின் உறவினர்கள், அங்கு நீச்சல் தடாகத்தில் குறித்த வர்த்தகர் சடலமாக மிதப்பதைக் கண்டு பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

தற்போது, ​​குறித்த வர்த்தகரின் பணப்பையில் இருந்த 4 கடனட்டைகள் காணாமல் போயுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த கடனட்டைகளை பயன்படுத்தி இந்தோனேஷியா செல்ல 5 விமான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அத்துடன், குறித்த வர்த்தகரின் கடன் அட்டையை பயன்படுத்தி கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் இருந்து சுமார் 5 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதுவரை வெளியாகியுள்ள தகவல்களின் அடிப்படையில் குறித்த வர்த்தகரின் கொலையில் பெண் ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

மேலும், கொலைசெய்யப்பட்ட வர்த்தகருடன் பெலவத்தை பிரதேசத்தில் உள்ள வீட்டில் உள்ள வேறு ஒருவரின் உதவியுடன் குறித்த பெண் இந்தக் கொலையை மேற்கொண்டிருக்கலாம் என பொலிஸார் மேலும் சந்தேகிக்கின்றனர்.

இதேவேளை, கொலைச் சம்பவம் இடம்பெற்றதாக சந்தேகிக்கப்படும் வீட்டில் சிசிடிவி கமராக்கள் பொருத்தப்படாததால், அருகில் உள்ள ஏனைய கட்டிடங்களில் உள்ள சிசிடிவி கமெராக்களை ஆய்வு செய்து சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை அடையாளம் காண தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கொலைசெய்யப்பட்ட வர்த்தகரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட வீட்டிற்கு அவர் வந்த கார் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்த சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கோடீஸ்வர வர்த்தகர் கொலை - விசாரணைகள் ஆரம்பம் (Update)
https://www.facebook.com/101424405897210/photos/a.195486213157695/195485669824416/
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version