யாழ் பல்கலை மாணவர்களுக்கு பாராட்டுகள் – மனோ எம்.பி

பயங்கரவாத தடை சட்டம் என்பதே தமிழருக்கு எதிராக 1979ல் உருவாகியது. ஏறக்குறைய 44 வருடங்களாக தமிழர், தமிழ் கட்சிகள், தமிழ் மாணவர்கள், தமிழ், இளைஞர்கள், தமிழ் தாய்மார்கள் போராடும்போது, வாளாவிருந்து விட்டு, இப்போது திடீரென தூக்கத்தில் இருந்து எழுந்து, வாகனம் பிடித்து, யாழ்ப்பாணத்துக்கு போய், “பயங்கரவாத தடை சட்டத்தை எதிர்க்க யாழ் பல்கலையும் இணைய வேண்டும்” என, அனைத்து பல்கலைக்கழக ஒன்றிய அழைப்பாளர் வசந்த முதலிகே முதலானோர் கோரியமை நகைப்புக்கு இடமானது. மறுபுறம், இத்தகையை கோரிக்கைக்கு “இணைகிறோம், ஆனால், எமது பிரச்சினைகளையும் உள்வாங்குங்கள்” என யாழ் பல்கலை மாணவர் ஒன்றியம் பதில் அளித்துள்ளமையை பாராட்டுகிறேன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலிவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது,

பயங்கரவாத தடை சட்டம் என்பதே தமிழருக்கு எதிராக 1979ல் உருவாகிய சட்டமாகும். ஏறக்குறைய 44 வருடங்களாக நம்மை போட்டு பாடு படுத்தும் சட்டம். இதை எதிர்கொண்டு, நம்மில் எத்தனையோ பேர் மாண்டு போனோம். இன்னும் எத்தனையோ பேர் சிறையில் வாழ்வை இழந்தோம். இன்னும் இழந்தப்படி இருக்கிறோம். எத்தனையோ குடும்பங்கள் அனாதரவாக வாடுகின்றன.

2006-2009 கொழும்பு மாநகரில் இந்த சட்டத்தை காட்டி வெள்ளை வானில், தமிழரை நாய் பிடிப்பதை போல் கடத்திக்கொண்டு போனார்கள். அதை எதிர்த்து போராடிய என்னையும் 2007ம் ஆண்டு ஒருமுறை கைது செய்தார்கள். கொலை செய்ய முயன்றார்கள்.

தமிழர்கள் 40வருடங்களுக்கு மேல் தேசிய, சர்வதேசியரீதியாக இந்த PTA சட்டத்தை எதிர்த்து போராடியதால் அது இன்று, ஐ.நா மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் கவனத்துக்கும் வந்துள்ளது.

இப்போது, கடந்த சில மாதங்களில், வசந்த முதலிகே, சிறி தம்ம தேரர் போன்ற சில தென்னிலங்கை சிங்கள போராளிகளை இச்சட்டம் பதம் பார்க்கும் போது, திடீரென தூக்கத்தில் இருந்து எழுந்து, வாகனம் பிடித்து, யாழ்ப்பாணத்துக்கு போய், அங்கே யாழ் பல்கலை இளம் பசங்களிடம், “பயங்கரவாத தடை சட்டத்தை எதிர்த்து நாம் போராடுகிறோம். நீங்களும் சேர்ந்து கொள்ளுங்கள்” எனக்கோருவது, 2023ன் மிக சிறந்த நகைச்சுவையாக தோன்றுகிறது.

ஆனால், அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்துக்கு, யாழ் பல்கலை மாணவர் ஒன்றிய இளைஞர்கள் சரியாக பதில் கூறி உள்ளார்கள் என நான் அறிகிறேன். யாழ் பல்கலை மாணவர் ஒன்றியத்துக்கு என் பாராட்டுகள் என தெரிவித்துள்ளார்.

மேலும், இதைதான் சமீபத்தில் நடந்து முடிந்த “அரகல-கிளர்ச்சி” போராட்டத்தின் பின் என்னை வந்து சந்தித்த, அரகல சிங்கள போராளிகளிடமும், அவர்கள் கொழும்பில் நடத்திய கூட்டங்களிலும் சிங்கள மொழியில் நான் சொன்னேன். “PTA சட்டத்தின் வரலாற்றை தெரிந்துக்கொண்டு, சிறைகூடங்களில் இருக்கும் நம்மவருக்காகவும் போராட தயார் என்றால், கசப்பான கடந்த காலத்தை மறந்து விட்டு கரம் கோர்க்க தயார்” என்று நான் பலமுறை சொல்லியுள்ளேன்.

வடக்கு கிழக்கு தமிழ், முஸ்லிம் மக்கள், மலையக தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் துன்பங்களையும் புரிந்துகொண்டு அவற்றையும் பொது போராட்டத்தில் இணைந்துக்கொள்ள சிங்கள அரசியல் கட்சிகள், சிங்கள மாணவர் இளைஞர் அமைப்புகள் தயாராகாதவரை இந்நாடு விடிவு பெறாது என மனோ கணேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version