யாழ்ப்பாணத்தில் பயிரிடப்படும் இலங்கையின் முதலாவது கரிம (Organic) புளி வாழைப்பழங்கள் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி டுபாய்க்கு ஏற்றுமதி செய்யப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் 350 ஏக்கரில் பயிரிடப்பட்ட 25,000 கிலோ புளி வாழைப்பழங்களே முதல் தொகுதியாக இவ்வாறு ஏற்றுமதி செய்யவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் 600 விவசாயிகள் புளி வாழை செய்கையில் ஈடுபட்டு வருவதாகவும், மேலும் 650 ஹெக்டேயருக்கு பயிர்ச்செய்கையை விரிவுபடுத்த உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நேற்று (11.04) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
விவசாய அமைச்சின் கீழ் உள்ள விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் தொழில்நுட்ப மற்றும் நிதி பங்களிப்பின் கீழ் புளிப்பு வாழை ஏற்றுமதி வலயங்களை நிறுவுவதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இவ்வருடத்திற்குள் எம்பிலிப்பிட்டிய மற்றும் ஹம்பாந்தோட்டையை அண்மித்த பகுதிகளில் புளிப்பு வாழை ஏற்றுமதி வலயமொன்றை நிறுவுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
செவனகல பிரதேசத்தில் வாழைப்பழ பதப்படுத்தும் நிலையத்தை அமைப்பதற்கு 150 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், ராஜாங்கனையில் வாழைப்பழ பதப்படுத்தும் நிலையம் நிறுவப்பட்டுள்ளதுடன், யாழ்ப்பாணத்தில் பதப்படுத்தும் நிலையத்தின் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
ராஜாங்கனையில் புளி வாழைப்பழங்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் இலங்கைக்கு ஏற்றுமதி வருமானமாக 20,000 அமெரிக்க டொலர்களும், யாழ்ப்பாண வாழைப்பழங்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் வாரந்தோறும் 40,000 அமெரிக்க டொலர்களும் இலங்கைக்கு கிடைக்கும் என அமைச்சர் அமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.