வவுனியா மாநகரசபை உத்தியோகஸ்தர்களோடு சந்திப்பு ஒன்றை நடாத்தியதாக வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் தெரிவித்துள்ளார். இன்று(21.04) நடைபெற்ற சந்திப்பில் பல முக்கிய விடயங்கள் பேசப்பட்டு முடிவெடுக்கப்பட்டதாக மேலும் தெரிவித்துள்ளார்.
இன்றைய சந்திப்பில் எடுக்கப்பட்ட முடிவுகள் என கீழ்வரும் விடயங்களை அவர் மேலும் வெளியிட்டுள்ளார்.
- அத்துமீறி கட்டப்பட்டு பயனின்றி இருக்கின்ற கட்டிடங்களை (தூண்களை) சட்டரீதியாக இடித்து, அதில் வருமானம் ஈட்டக்கூடிய தற்காலிக கடைகளையாவது அமைக்கவேண்டும், இவ்விடயத்தில் காலணி தைப்பவர்களுக்கும் முன்னுரிமை அளித்தல் வேண்டும்,
- ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட மாநகரசபை இடங்களை மீளப்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்,
குறிப்பாக, முத்தையா மண்டபத்திற்கு அருகில் உள்ள (எம்பயர் முன்னால்) இடத்தினை சட்டரீதியாக மீளப்பெறல் வேண்டும், - பழைய பஸ்நிலையத்தின் மத்தியில் இருக்கின்ற (பிரயோசனமற்ற) இரண்டு கட்டிடத்தை அகற்றவேண்டும் அல்லது அதனை வருமானம் ஈட்டக்கூடியவாறு பயன்படுத்த வேண்டும்,
- பழைய பஸ்நிலைய கடைத் தொகுதியினர் மழை நேரத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனைக்கு தீர்வு காணவேண்டும்,
- பழைய பஸ்நிலைய மலசலகூடம் தொடர்பாக கவனம் செலுத்தப்பட வேண்டும்,
- அங்காடி வியாபாரிகளுக்கு மாற்றுவழி தொடர்பான யோசனை முன்வைக்க வேண்டும், அதுவரை அவர்களை சிரமப்படுத்த வேண்டாம்,
- குடியிருப்பு பூங்கா, மாநகரசபைக்கு வருமானம் ஈட்டக்கூடிய ஒன்று, ஆனால், பயனற்று இருக்கின்றது, பிரதேச செயலாளர், நீர்ப்பாசன திணைக்களத்தோடு கலந்துரையாடி, நியாயமான வருமானம் கிடைப்பதற்கு ஒழுங்கு செய்யப்படவேண்டும்,
- வட்டார ரீதியாக நடமாடும் சேவை செய்து, வருமானம் ஈட்டுவதில் உள்ள பிரச்சனைகள் ஆராயப்பட வேண்டும்,
- கடைத் தொகுதிகளின் பெயர் மாற்றத்திற்கு முன்னுரிமை அளித்து விரைவுபடுத்த வேண்டும்,
- வைரவபுளியங்குளத்தின் கீழ் நடைப்பயிற்சி பாதை ஒன்றினை அமைக்க திட்டம் தயாரிக்க வேண்டும்,
- காய்கறி மொத்த விற்பனை நிலையம் தொடர்பாக (வருமானம் தொடர்பாக) எதிர்கால அறிக்கை தயாரிக்க வேண்டும்,
- வீதி விளக்குகள் பொருத்துதல் தொடர்பாக மாநகர சபைக்கும், மின்சார சபைக்கும் இடையே உள்ள பிரச்சனை தொடர்பான அறிக்கை,
- பொலிஸ் நிலையம் முன்னால் உள்ள இடத்தின் வருமானம் பற்றிய அறிக்கை, வருமானம் போதாவிட்டால் மாற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்,
- வட்டார எல்லை நிர்ணயம் பற்றிய கருத்துக்கள்,
- போன்ற பல விடயங்கள் தொடர்பாக பேசப்பட்டது. பேசப்படுகின்ற அனைத்து விடயங்களையும் விரைவுபடுத்தி மக்கள் நலன் சார்ந்ததாக நடைமுறைப்படுத்த வேண்டும், அதேபோல் வருமானம் ஈட்டுவதற்கும் அக்கறை செலுத்த வேண்டும்.
- வருகிற கிழமைகளில் (பாராளுமன்ற அமர்வு தவிர்ந்த நாட்களில்) எம்மோடு இணைந்து நேரடி விஜயம் செய்து தீர்வு காண்பதற்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என்பதையும் தெரிவித்தோம்.
அண்மையில் உள்ளூராட்சி மன்றங்கள் கலைக்கப்பட்டு உள்ளூராட்சி ஆணையாளர்களுக்குள் அனைத்து உள்ளூராட்சி சபைகளும் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் குணசிங்கம் திலீபன் இந்த சந்திப்பில் கலந்து கொண்டுள்ளார்.
