கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பிரமுகர்கள் பயணிகள் முனையத்தில் உயர் தொழில்நுட்ப ஸ்கேனிங் இயந்திரங்களை நிறுவுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க சுங்கப் பணிப்பாளர் நாயகத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் பொது பயணிகள் முனையத்தில் விமானப் பயணிகளின் பயணப் பொதிகளை பரிசோதிப்பதற்காக அதிநவீன தொழில்நுட்ப ஸ்கேனிங் இயந்திரங்கள் இருப்பதாகவும், ஆனால் பிரமுகர் பயணிகள் முனையத்தில் அவ்வாறான வசதிகள் இல்லை எனவும் சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக சிறப்பு பயணிகள் முனையம் வழியாக வரும் பிரமுகர்களின் பயண பொதிகள் சோதனை செய்யப்படுவதில்லை என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெரும்பாலான வெளிநாடுகளில் உள்ள சிறப்பு பயணிகள் முனையங்களிலும், பிரமுகர் பயணிகள் முனையங்களிலும் உயர் தொழில்நுட்ப ஸ்கேன் ஆய்வு இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
பிரமுகர் பயணிகள் முனையத்தின் ஊடாக சட்டவிரோதமான பொருட்கள் கொண்டு வரப்படுவதை தடுக்கும் வகையில் ஜனாதிபதியின் பணிப்புரையின் கீழ், இந்த விசேட பயணிகள் மற்றும் பிரமுகர்களுக்கான முனையத்திலும் இந்த சாதனங்களை நிறுவுமாறு ஜனாதிபதியின் செயலாளர் இலங்கை சுங்கத்திற்கு அறிவித்துள்ளார்.
இது தொடர்பான அறிக்கையை வழங்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் சுங்கப் பணிப்பாளர் நாயகத்திற்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.