இந்தியாவின் கிழக்கு மாநிலமான ஒடிசாவில் இடம்பெற்ற ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 233 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், இந்த விபத்தில் 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்காக பாசோர் மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க 100 மருத்துவர்கள் கொண்ட மருத்துவக் குழு வரவழைக்கப்பட்டுள்ளது.
நேற்று (02.06) இரவு 7.00 மணியளவில் ஷாலிமாரில் இருந்து சென்னை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டதாகவும், அதன் சில பெட்டிகள் எதிர் தண்டவாளத்தில் விழுந்ததாகவும், அப்போது அந்த வழியாக யஸ்வான்பூரில் இருந்து ஹவுரா நோக்கி பயணித்த சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் கீழே விழுந்த ரயில் பெட்டிகள் மீது மோதியத்தில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்து தொடர்பில் தம் வருத்தத்தை தெரிவித்துக்கொள்வதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தமது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குமாறும் அவர் பணிப்புரை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.