வவுனியா சமயபுரம் கிராமத்தில் மாடுகளை திருட முயன்றதாக இரு நபர்களை மடக்கிப்பிடித்த பொதுமக்கள் குறித்த இரு நபர்களையும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் ஒப்படைப்படைத்தனர்.
குறித்த பகுதியில் இன்று (12.06) காலை 6.00 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வவுனியா நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமயபுரம் கிராமத்தில் கடந்த சில மாதங்களாக கால்நடைகள் திருடப்படுகின்றமை அதிகரித்த வண்ணமே காணப்பட்டதுடன் கால்நடைகளை களவாடுபவர்கள் பொதுமக்களினால் கையும் களவுமாக பிடிபட்டு நெளுக்குளம் பொலிஸ் நிலையத்திலும் கையளித்துள்ளனர். எனினும் அப்பகுதியில் கால்நடைகள் களவாடப்படுகின்றமை தொடர்ந்த வண்ணமேயிருந்தது.
இந்நிலையில் இன்று (12.06) காலை 6.00 மணியளவில் சமயபுரம் விநாயகர் வித்தியாலய வீதியில் மாட்டினை களவாட முயன்ற இரு நபர்களை பொதுமக்கள் நையப்புடைத்து வாகனம் ஒன்றில் கட்டி வைத்தமையுடன் அவர்களை நெளுக்குளம் பொலிஸ் நிலைய பொலிஸாரிடம் வழங்குவதற்கு பொதுமக்கள் மறுப்பு தெரிவித்திருந்தமையுடன் மாட்டினை களவாட முயன்ற இரு நபர்களையும் வாகனத்தில் ஏற்றி வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் ஒப்படைத்தனர்.
இவ்விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாதிக்கப்பட்ட மக்கள் ,
எமது கிராமத்தில் கால்நடைகள் களவாடப்படுகின்றமை தொடர்ந்த வண்ணமேயுள்ளது இதனால் எமது வாழ்வாதாரம் பாதிப்படைந்துள்ளமையுடன் இரவில் நிம்மதியாக உறங்குவதற்கு கூட முடியவில்லை . பல தடவைகள் கால்நடைகளை களவாடுகளை பிடித்துக்கொடுத்தும் நெளுக்குளம் பொலிஸார் எவ்வித நடவடிக்கையினையும் மேற்கொள்ளவில்லை என்பதினால் நாங்கள் இந் தடவை திருடர்களை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் ஒப்படைப்படைத்துள்ளோம் என தெரிவித்தனர்.